தமிழ்நாட்டு அரசியல் வேண்டும்.. ஆனால் படத்தின் பெயர் மட்டும் ஆங்கிலத்தில்.. விஜய் மீது பிஸ்மி அட்டாக்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்; 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபடவிருக்கிறார் விஜய். அவருக்கு யார் யார் எல்லாம் திரைத்துறையிலிருந்து ஆதரவு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.

GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடந்துவருகிறது. இப்படமானது டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையே விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறது விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்து வருகின்றனர்.
கடைசி படம்: முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று விஜய் அறிவித்திருக்கிறார். எனவே அவரது ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 உருவாகிறது. அதனை வெற்றிமாறன் இயக்குவார் தகவல்கள் அதிகம் பரவின. ஆனால் இப்போதோ, வெற்றிமாறன் அந்தப் படத்தை இயக்கமாட்டார்; கார்த்திக் சுப்புராஜ் அல்லது ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமைதி: இதற்கிடையே திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியிருந்தார். அதற்கு விஜய் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. விஜய்யின் அந்த மௌனம் பெரும் விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி விஜய் குறித்து பேசுகையில், "தமிழ்நாடு அரசியல் வேண்டும் என விஜய் ஆசைப்படுகிறார். ஆனால் அவரோ இப்போதுவரை தனது படங்களுக்கு ஆங்கிலத்தில்தான் பெயர்களை வைத்துக்கொண்டுவருகிறார்.
இதுதான் அக்கறை: இதிலிருந்தே தெரிகிறது அவருடைய தமிழ் பற்று எவ்வளவு இருக்கிறது என்று. அதுமட்டுமின்றி ஹிந்தியை எப்படியாவது நமது தமிழ்நாட்டில் திணிக்க வேண்டும் என்று முயற்சித்துவருகிறார்கள். ஆனால் அதை நாம் தொடர்ந்து தடுத்துக்கொண்டே வருகிறோம். இப்போது விஜய் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. எனவே கோட் படத்தின் பெயரையாவது தமிழில் வைத்திருக்கலாம். இந்த விஷயத்தில் அஜித் பரவாயில்லை. அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என்றாலும் தன்னுடைய படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











