எந்த அரசாங்கமும் சினிமாவுக்கு நல்லது பண்ணலை! - கமல் ஹாஸன் பரபரப்பு பேச்சு
சென்னை: எந்த அரசாங்கமும் சினிமாவுக்கு நல்லது பண்ணவில்லை, என்று பேசி பரபரப்பு கிளப்பியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன்.
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள அடுத்த படம் வாலிப ராஜா. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் நடந்தது. தனக்கு ராசியான தியேட்டர் என்று கூறி, தொடர்ந்து இந்த அரங்கில் விழாக்களை நடத்துகிறாராம் சந்தானம்.

சந்தானம் வரவில்லை
ஆனால் விழாவுக்கு அவர் வரவில்லை. ரஜினியுடன் லிங்கா படப்பிடிப்பில் இருப்பதால் வரமுடியவில்லை என அறிவித்தார்கள்.
இசைத் தட்டை கமல் ஹாஸன் வெளியிட, இயக்குநர் கேவி ஆனந்த் பெற்றுக் கொண்டார்.

கமல்
விழாவில் கமல் பேச்சுதான் ஹைலைட். அவர் பேசுகையில், "இளைஞர்களை வாழ்த்தணும், உற்சாகப்படுத்தணும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தவர் என்னோட வாத்தியார் கே.பி.சார்தான். அவர் எங்களையெல்லாம் வாழ்த்தியதால்தான் எங்களால் இங்க நிற்க முடியுது.

குலுக்களில் விழுந்த மாதிரி...
சினிமா என்பது விசித்திரமான உலகம். இங்கு ஏராளமான திறமைசாலிகள் இருக்காங்க. அதே நேரம் நான் வியந்த பல திறமைசாலிகளில் பலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நானெல்லாம் ஏதோ குலுக்கலில் விழுந்த மாதிரி இந்த இடத்திற்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

ரோட்ல போனவனை...
அரங்கேற்றம் படத்தில் நான் நடித்து பல நாட்களுக்கு பிறகு ஒரு நாள் சாலையில் நடந்து போய் கொண்டிருந்தேன். அப்போது காரில் போன கே.பி.சார் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘ஆபிசுக்கு வந்துரு' என்றார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் ஹீரோவாக நடிக்க ஸ்ரீகாந்த்தை கேட்டார்களாம். அவர் பிசியாக இருந்திருக்கிறார். ‘அதுக்காக ரோட்ல போறவனையா நடிக்க வைக்க முடியும்' என்று பாலசந்தர் சார் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் ரோட்டில் போய் கொண்டிருந்த என்னைப் பார்த்தாராம். அதனால்தான் அந்த சிரிப்பு. அன்று அந்த சாலையில் நான் நடந்து போகாவிட்டால், எனக்கு அப்படியொரு படம் கிடைத்திருக்குமா என்று தெரியாது.

எந்த அரசும்...
சினிமாவுக்கு எந்த அரசும் நல்லது செய்யவில்லை. நான் இந்த அரசை மட்டும் சொல்லவில்லை. இந்தியா முழுவதும் இருக்கிற அரசாங்கங்களையும்தான் சொல்கிறேன். ஆனாலும் சினிமா இயங்கிக் கொண்டுதானிருக்கிறது. இங்கு பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கிறது.

வக்கீலாகி இருப்பேன்
நல்லவேளை எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் வக்கீலாகி, குற்றவாளிகளை விடுதலை செய்ய வாதாடிக் கொண்டிருந்திருப்பேன்," என்றார்,


Click it and Unblock the Notifications











