வழக்கை வாபஸ் வாங்கவே முடியாது! - விநியோகஸ்தர்களிடம் கறாராகக் கூறிய கமல்
திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்க முடியாது என்று மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார் நடிகர் கமல் ஹாஸன்.
தியேட்டர்கள் கிடைக்காத சூழலில் தனது பெரும் சர்ச்சைக்குரிய படமான விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடப் போவதாக கமல் ஹாஸன் அறிவித்தார். இதனால் கமல் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறி தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் மல்லுக்கு நின்றனர்.

இந்த சூழலில் இந்திய போட்டி ஆணையத்தில் இது குறித்து கமல் ஹாஸன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரை விசாரித்த ஆணையம், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள் எந்த வகையில் விஸ்வரூபம் படத்துக்கு எதிராக இருந்தார்கள் என்று விசாரணை நடத்தப்பட்டது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் மீது பெரும் அபராதம் விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
உத்தம வில்லன் படத்தின் சென்னை உரிமையை வாங்கியுள்ள அபிராமி ராமநாதனும் இதில் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.
இந்த நிலையில் கமலை சமீபத்தில் சந்தித்த அபிராமி ராமநாதன், தங்களுக்கு எதிரான வழக்கை காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியாவிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் கமல். இந்த வழக்கை திரும்பப் பெறுவது முடியாத காரியம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











