கமலுடன் கை கோர்க்கப் போகிறார் சல்மான்.. எதுக்குன்னு தெரியுமா??
விஸ்வரூபம் பட புரோமோஷனுக்காக சல்மான்கானுடன் கமஹாசன் இணைய உள்ளார்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் இந்தி புரோமோஷனுக்காக சல்மான்கானுடன் கைகோர்க்க உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. சினிமா அரசியல் தொலைக்காட்சி என்று பல தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் தமிழ் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்குகிறார்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனுடன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேர் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி மொழிகளில் தயாராகி தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் வேலைகளில் கமல்ஹாசன் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தின் இந்தி வெர்ஷனுக்கான புரோமோஷன் நிகழ்ச்சி சல்மான் கான் தொகுத்து வழங்கும் "தஸ் கா தம்" ஷோவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் கமல்ஹாசனும், சல்மானும் முதல்முறையாக இணைந்து திரையில் தோன்ற உள்ளனர். இது இரு நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
கமல் தமிழ் பிக் பாஸ், சல்மான்கான் இந்தி பிக்பாஸ் என்ற ஒற்றுமை இருவரையும் இணைத்துள்ளது என நெட்டிசன்கள் கூறுகின்றனர். விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோது கமல்ஹாசன் பிரச்சனைகளை சந்தித்தார். அப்போது இது மிகச்சிறந்த படம் தவறாமல் பாருங்கள் என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்டவர் சல்மான்கான் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











