நானும் ரஜினியும் சேர்ந்து படம் செய்றோமா?.. அவர்ட்ட நிரூபிக்கணும்.. கமல்ஹாசன் ஓபன் டாக்
சென்னை: ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் இந்திய சினிமாவின் அடையாளங்களாக இருப்பவர்கள். அவர்கள் இரண்டு பேருக்குமே செலிபிரிட்டிகள் முதல் சாமானியர்கள்வரை ரசிகர்களாக இருக்கிறார்கள். கடைசியாக ரஜினி நடித்த வேட்டையன் சுமாரான வரவேற்பையே பெற்றது. கமல் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் தக் லைஃப் படமோ மோசமான ரெஸ்பான்ஸை பெற ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் ரஜினி குறித்து கமல் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் கமல் ஹாசனும், ரஜினிகாந்த்தும். திறமையின் துணையால் வளர்ந்த அவர்கள் இருவரும் இப்போது இந்திய சினிமாவின் அடையாளங்களாக திகழ்கின்றனர். அடையாளம் மட்டுமின்றி வளர்ந்துவரும் நடிகர்களுக்கு இரண்டு பேருமே இன்ஸ்பிரேஷனாக இருந்துவருகின்றனர். ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்தனர். ஒருகட்டத்தில் ரஜினியை அழைத்த கமல் ஹாசன் நாம் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் இருவரது கரியரும் முன்னேறாது என்று கூறி தனியாக நடிக்குமாறு அறிவுறுத்தினார். அதனை கேட்டு ரஜினியும் தனியாக நடிக்க ஆரம்பித்தார்.
சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த்: தனியாக நடிக்க ஆரம்பித்து தனக்கென பிரத்யேக உடல்மொழியையும், ஸ்டைலையும் உருவாக்கிக்கொண்ட ரஜினிகாந்த் உச்சத்திற்கு சென்றார். அவரது நடை, உடை, பாவனையை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்தனர். இன்றுவரை ரஜினிகாந்த் அதே பட்டத்துடன் வலம் வருகிறார். இப்போது கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்துவருகிறார்.

உலக நாயகன் கமல்ஹாசன்: ரஜினிகாந்த் ஒருபக்கம் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களில் நடிக்க, கமல்ஹாசன் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து பல புதுமைகளை புகுத்தினார். இதன் காரணமாக கமல் ஹாசன் உலக நாயகன் என அழைக்கப்படுகிறார். அவரது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசம் நிச்சயம் இருந்துவிடும் என்ற விதியும் இன்று அகலாமல் இருக்கிறது. ரஜினியேகூட கமல் ஹாசனை கலையுலக அண்ணா என அழைத்த சம்பவம் அரங்கேறியிருப்பது அனைவரும் அறிந்தது.
எப்போது சேர்வார்கள்: ரஜினியும் கமலும் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் எப்படியாவது மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையில் இருப்பவர்களிடமே இருக்கிறது. அவர்களும் தாங்கள் சேர்ந்து நடிப்பதற்கு தயார்தான் என்று ஓபனாகவே அறிவித்துவிட்டார்கள். இருப்பினும் இரண்டு பேரையும் சேர்த்து படம் எடுக்கும் அளவுக்கு எந்த இயக்குநரும் இன்னமும் கதை யோசிக்கவில்லை.
வாய்ப்புகள் இருக்கா?: இடையில் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் அவர்களை இணைத்து படம் எடுக்க ஆசையை தெரிவித்தார்கள். இருப்பினும் அவர்களாலும் கதையை யோசிக்க முடியவில்லையோ என்று ரசிகர்கள் கேள்விள் எழுப்பிவருகின்றனர். முக்கியமாக இரண்டு பேருக்கும் வயது ஆகிவிட்டது. சொல்லப்போனால் திரைத்துறையில் அவர்கள் தங்களது கடைசி காலத்தில் இருக்கிறார்கள். எனவே வாய்ப்புகள் கம்மிதான் என்ற கருத்தும் மேலோங்கி இருக்கிறது.
கமல் ஹாசன் பேச்சு: இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு கமல்ஹாசன் இதுகுறித்து பேசுகையில், "நாம் ஒரு படம் செய்ய வேண்டும் என்ற பேசியிருந்தோமே என்று ரஜினி கேட்டார். அதற்கு நான், அதை வெளி ஆட்கள் செய்யக்கூடாது. ஒன்று நீங்கள் தயாரியுங்கள். இல்லை நான் தயாரிக்கிறேன் என கூறினேன். இதற்கு முன்னுதாரணமாக நானும் மணிரத்னமும் தக் லைஃப் செய்திருக்கிறோம். ராஜ்கமல் நிறுவனத்தின் திறமையை ரஜினியிடம் நிரூபிக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











