ரஜினி நடித்ததில் பிடித்த படம் அதுதான்.. நானும் நடித்திருக்க வேண்டியது.. கமல்ஹாசன் ஓபனாக சொல்லிட்டாரே
சென்னை: கமல்ஹாசன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கதை கமல்தான் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவருடன் சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜூன் ஐந்தாம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதுவரை வெளியான ட்ரெய்லரும், படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டு பாடல்களும் மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருக்கின்றன. கண்டிப்பாக இந்தப் படம் கமலும் மணியும் ஏற்கனவே இணைந்த நாயகன் படம் போல் ஒரு பெஞ்ச் மார்க்காக இருக்கும் என்ற நம்பிக்கை இரண்டு பேரின் ரசிகர்களிடையேயும் பெரிய அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர் கமல்ஹாசன். தனக்கு படிப்பு ஏறாவிட்டாலும் சினிமாவுக்குள் வந்து ஏகப்பட்ட விஷயங்களை படித்து தெரிந்தவர். இப்போதைய இந்திய திரைத்துறையில் சினிமாவில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவர்களில் முதன்மையானவராகவும் விளங்கிக்கொண்டிருக்கிறார் கமல். சமீபத்தில்கூட அமெரிக்காவுக்கு சென்று ஏஐ தொழில்நுட்பம் குறித்து ஒரு பகுதியை படித்துவிட்டு வந்திருக்கிறார். இப்படி உலகத்தில் எந்த டெக்னாலஜி வந்துவிட்டாலும் முதல் ஆளாக கற்றுக்கொள்ளும் இந்திய நடிகர்களில் கமல்ஹாசன் மட்டும்தான் இருக்கிறார். அதன் காரணமாகத்தான் அவர் பல நடிகர்களுக்கு ரோல் மாடலாகவும், இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
அரசியல் பிரவேசம் செய்த கமல்ஹாசன்: சினிமாவில் பிஸியாக நடித்துவந்த கமல் திடீரென்று அரசியல் கட்சி தொடங்கி அந்தக் களத்துக்கு சென்றார். மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவைகளில் அவரது கட்சி போட்டியிட்டது. ஆனால் சினிமா களத்தில் வென்றது போல் அவரால் அரசியலில் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து திரைத்துறையில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனை செய்தது. குறிப்பாக விக்ரம் வருவதற்கு முன்பு வெளியான சில தமிழ் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக்கொண்டிருந்தன. மாறாக கேஜிஎஃப் போன்ற பிற மொழி படங்கள் இங்கு ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. விக்ரம் வந்துதான் தமிழ் படங்களின் ஆதிக்க்த்தை கோலிவுட்டில் மீண்டும் கொண்டு வந்தது எனலாம்.

இந்தியன் 2: விக்ரம் படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த கமல்ஹாசன் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 பணிகளையும் மீண்டும் தொடங்க சொல்லி அதில் நடித்தார். ஆனால் முதல் பாகம் போன்று இரண்டாவது பாகம் ஹிட்டடிக்கவில்லை. ஷங்கரின் மேக்கிங், திரைக்கதை, அனிருத்தின் இசை, நடிகர்களின் நடிப்பு, ஜெயமோகனின் வசனம் என எதுவுமே படத்துக்கு செட்டாகவில்லை. இதன் காரணமாக படுதோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் சந்தித்தது அப்படம். அதுமட்டுமின்றி ஷங்கர் எல்லாம் டீசன்ட்டாக சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடலாம் என்ற விமர்சனத்தையும் பலர் ஓபனாகவே சொன்னார்கள். அதேபோல் கமலின் கரியரிலேயே இந்த அளவுக்கு ட்ரோல் செய்யப்பட்ட படம் என்றால் இந்தியன் 2தான் என்ற மோசமான பெயரையும் அப்படம் பெற்றது.
தக் லைஃப்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் கமலும், மணிரத்னமும் இணைந்து தக் லைஃப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் இணைந்த நாயகன் திரைப்படம் இந்திய அளவில் சிறந்த பத்து திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது.இதன் காரணமாக இந்தப் படமும் அதேபோன்ற ஒரு இடத்தை பிடிக்கும் என்ற உச்சக்கட்ட ஆவல் கமலின் ரசிகர்களிடம் இருக்கிறது. இதில் அவருடன் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஜூன் ஐந்தாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் இரண்டு சிங்கிள்கள் அட்டகாச வரவேற்பை பெற்றிருக்கின்றன. இவற்றில் சுகர் பேபி பாடலை திரிஷாவும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கமலின் கதைதான்: கமல்ஹாசன் நடிப்பு மட்டுமின்றி மற்ற துறைகளிலும் தன்னை நிரூபித்தவர் என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை அவர் கதை எழுதிய தேவர் மகன், அன்பே சிவம், ஆளவந்தான், விருமாண்டி உள்ளிட்ட ஏராளமான படங்கள் கல்ட் க்ளாசிக்காக இருந்துகொண்டிருப்பவை. தற்போது தக் லைஃப் படத்தின் கதையையும் கமல்தான் எழுதியிருக்கிறார். மணிரத்னம் சொன்ன கதை ஓவர் செலவு வைக்கும் என்பதை கணித்த அவர்; தன்னிடம் இருக்கும் கதையை மணியிடம் சொல்ல; அதற்கு மணிரத்னம் ஒத்துக்கொண்டு இயக்குவதற்கு ரெடியாகிவிட்டார். முதன்முறையாக கமலின் கதையை மணிரத்னம் இயக்குவதாலும் இப்படத்தின் மீது ஆர்வம் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. அதேபோல் சிம்புவும் முதன்முறையாக கமலுடன் இணைந்திருக்கிறார். எனவே அவர்களுக்குள்ளான கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கமல்ஹாசன் கொடுத்த பேட்டி: படம் வெளியாக இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன் ரஜினிகாந்த் குறித்து பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "ரஜினிகாந்த் நடித்த படங்களிலேயே எனக்கு ரொம்பவே பிடித்த படம் என்றால் அது முள்ளும் மலரும்தான். ஒருமுறை நானும் அவரும் அமர்ந்து பேசினோம். அந்த சமயத்தில் நான் முள்ளும் மலரும் போன்றும், அவர் பாட்ஷா போன்றும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எனக்கு முள்ளும் மலரும் படத்தில் நடித்த ரஜினிகாந்த்தைத்தான் ரொம்பவே பிடிக்கும். அதேபோல் அபூர்வ ராகங்கள் படத்தில் உண்மையான வில்லன் என்றால் அது நான்தான். மூன்றாவது நபரின் அறை கதை தட்டும் முரட்டுத்தனமான காதலன் நான்.

அதுவும் என்னுடைய படம்: முள்ளும் மலரும் படம் உருவாகும்போது நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அந்தப் படத்தின் கேமரா மேன் பாலுமகேந்திரா, இயக்குநர் மகேந்திரன் ஆகிய இரண்டு பேரையும் எங்கள் வீட்டில்தான் சந்திக்க வைத்தேன்.அதுவும் என்னுடைய திரைப்படம்தான். அந்தத் திரைப்படத்தில் முதலில் நானும் ரஜினியுடன் நடிக்க வேண்டியதாக இருந்தது. எனக்கு எந்த கேரக்டர் என்றெல்லாம் முடிவு செய்யவில்லை. ஆனால் நான் நடிக்கவில்லை. ஒருவேளை நான் நடித்திருந்தால் நானும், ரஜினியும் நடித்த இன்னொரு படமாக அது போயிருக்கும். அதனாலும் நாங்கள் சேர்ந்து நடிக்கவில்லை. அதில் ரஜினி தனது நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பார். அதேபோல் தப்புத்தாளங்கள் படத்திலும் நடிப்பில் பின்னியெடுத்திருப்பார்" என்றார்.
நல்ல நண்பர்கள்: முன்னதாக ரஜினிகாந்த் நடிக்க வந்த புதிதில் கமலுடன் சேர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்தால் இரண்டு பேருமே வளர முடியாது என்று முடிவு செய்து அவர்கள் பிரிந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தனித்தனியாக நடித்தாலும் இன்றளவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











