நான் பார்த்து பொறாமைப்படும் நடிகர் நீங்கள்தான்.. கமல் பேச்சை கேட்டு கண் கலங்கிய ஜோஜு ஜார்ஜ்
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் தக் லைஃப் திரைப்படம் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இப்படத்தின் மீது இந்திய அளவில் அதிகம் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. காரணம் மணிரத்னம் - கமல் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதுதான். இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கமல் ஹாசன் பேசியதை கேட்டு நடிகர் ஜோஜு ஜார்ஜ் கண்கள் கலங்கினார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம் தக் லைஃப். அவருடன் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்துக்கு முன்னதாக கமல் நடித்திருந்த இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்து கடுமையான ட்ரோலுக்கு உள்ளானது. இதன் காரணமாக இப்படத்தின் மீது அவரும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.
கல்ட் க்ளாசிக் கூட்டணி: மணிரத்னமும், கமலும் இணைந்து ஏற்கனவே நாயகன் படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். இந்திய திரைத்துறையில் யார் கேங்ஸ்டர் திரைப்படத்தை எடுத்தாலும் கண்டிப்பாக அப்படத்தின் ரெஃபரன்ஸ் இருக்கும். அந்த அளவுக்கு அப்படத்தில் இரண்டு பேரும் தரமான வேலைப்பாடை கொடுத்திருந்தார்கள். அதன் காரணமாகத்தான் படம் வெளியாகி 30 வருடங்களை கடந்தும் இன்றும் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்படுகிறது.

யாருடைய கதை?: தக் லைஃப்பை பொறுத்தவரை கதை மணிரத்னத்துடையது கிடையாது. கமல் ஹாசன் எழுதியிருகிறார். அவர் சொன்ன ஐடியாவைத்தான் மணி டெவலப் செய்திருக்கிறார். எனவே முதன்முறையாக கமலின் கதையை மணி இயக்கியிருப்பதால் எந்த மாதிரியான ட்ரீட்மென்ட்டை படத்தில் கொடுக்கப்போகிறார் போன்ற ஆவலும் இருக்கிறது. கண்டிப்பாக இந்தியன் 2வில் விட்டதை இதில் கமல் பிடித்துவிடுவார் என்றுதான் ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
பட்டையை கிளப்பிய ட்ரெய்லர்: மேலும் சமீபத்தில்தான் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.அதில் சிம்புவின் ஸ்க்ரீன் பிரெசென்ஸையும், அவரது நடிப்பையும் பார்த்து அனைவரும் மிரண்டுதான் போயிருக்கிறார்கள். கண்டிப்பாக கமலும், சிம்புவும் சேர்ந்து நடிப்பில் மேஜிக் செய்திருப்பார்கள் என்பதும் உறுதியாகியிருக்கிறது. இதன் காரணமாக ட்ரெய்லரும் செம ரெஸ்பான்ஸை பெற்றது.சூழல் இப்படி இருக்க நேற்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

கமலின் பேச்சு: இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாசன், 'முதலில் எனக்கு ஜோஜு ஜார்ஜை யார் என்று எனக்கு தெரியாது. அவரது இரட்டை படத்தை பார்க்க சொன்னார்கள். அதை பார்த்து நான் மிரண்டுவிட்டேன். ஏனெனில் நான் 30க்கும் மேற்பட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அந்தப் படத்தை பொறுத்தவரை ஜோஜு ஜார்ஜ் மிக சிறப்பாக நடித்திருந்தார். ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நடக்கும் கதையாகத்தான் அது இருக்கும்.
வித்தியாசம் தெரியும்: படம் பார்க்கும்போதே இரட்டை வேடங்களை வித்தியாசம் கண்டுபிடித்துவிடலாம். அதனை பார்த்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன் ஜோஜு" என்றார். இதனை கேட்ட ஜோஜு ஜார்ஜோ ஆனந்த கண்ணீர் வடித்தார். முன்னதாக இதே மேடையில் பேசிய சிம்புவும், தனது தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷாவை பற்றி பேசும்போது கண்கள் கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு வீடியோக்களும் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆர்மபித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











