தியேட்டரில் விற்கும் குளிர்பான விலையைவிட டிக்கெட் விலை அதிகமாக இருக்க வேண்டும் - கமல்

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் (பிக்கி) இன்று சென்னை பார்க் ஷெரட்டன் ஓட்டலில் ஊடகம் மற்றும் கேளிக்கை வர்த்தக கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்திய சினிமாத் துறையின் 100 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பிக்கி டைரக்டர் ஜெனரல் டாக்டர் அரபிந்த் பிரசாத் துவக்கி வைத்தார்.
ஊடகங்கள் மற்றும் கேளிக்கை வர்த்தக கூட்டுக் குழுவின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுப் பேசினார். தொலைக்காட்சிகளின் தரவரிசை பற்றிய ஆய்வறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
கமல் பேசுகையில், "ஊடகம் மற்றும் கேளிக்கை துறையின் வளர்ச்சிக்கு பிக்கியின் பொழுதுபோக்கு பிரிவு, பல்வேறு கொள்கை மாற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக பணியாற்றியிருக்கிறது.
இந்திய சினிமாவின் தரம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தென்னிந்திய சினிமாத் துறை தேசிய சினிமாவின் மையமாக திகழ்கிறது. இது பெரிய பெருமை," என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "திரைப்படத்துறையில் அன்னிய முதலீடு வந்தால் அது வரவேற்கக் கூடியதுதான்.
ஆனால் அதற்கு முன்னதாக சில்லரை வணிகத்தில் அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது. பொதுமக்கள் தியேட்டர்களுக்கு சென்று எளிதாக படம் பார்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் தியேட்டர்களில் விற்கும் குளிர்பானங்களின் விலையைவிட டிக்கெட் விலை அதிகமாக இருக்க வேண்டும்.
இதனால் திருட்டு வி.சி.டி.க்களை தடுக்க முடியும். திரைப்பட தயாரிப்புக்கு ஆகும் செலவுக்கு ஏற்ப, தியேட்டர்களில் கட்டண உயர்வும் தேவை," என்றார்.
கூட்டத்தில் பிக்கி தலைவரின் ஆலோசகர் முராரி, இயக்குனர்கள் பி.சசிக்குமார், லிங்குசாமி, அமீர், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குனர் பேரி ஆஸ்போர்ன் மற்றும் திரைப்படத்துறை மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications











