கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போக ஆசைப்படும் கார்த்தி
சென்னை: கார்த்திக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்று கோடம்பாக்கத்தில் பேச்சாகக் கிடக்கிறது.
இளைய தளபதி விஜய்யை அடுத்ததாக கார்த்திக்கு அரசியல் ஆசை வந்துள்ளது என்று கூறப்படுகிறது. அரசியல் ஆசையால் தான் அவர் அரசியல் கதை படங்களாக பார்த்து பார்த்து நடிக்கிறாராம். ஓவர் பில்டப்புக்கு பிறகு வெளியாகி புஸ்ஸாகப் போன கார்த்தியின் சகுனி ஒரு அரசியல் படம் என்று உங்களுக்கே தெரியும்.

இந்நிலையில் அட்டக்கத்தி இயக்குனர் ரஞ்சித் வடசென்னையில் வாழும் கபடி வீரர் ஒருவரின் கதையை எடுத்துக் கொண்டு கார்த்தியிடம் சென்றுள்ளார். கதையைக் கேட்ட கார்த்தியும் ஓ.கே. சொல்லியிருக்கிறார். கார்த்தியிடம் கதை சொல்லி ஓகே வாங்குவதே பெரிய பாடு. இதில் கதையை ஓகே செய்த பிறகு ரஞ்சித்தை அழைத்து அரசியல் கதை பண்ணலாமே அப்படி ஒரு கதையுடன் வாருங்கள் என்று கூறியுள்ளார் கார்த்தி.
ரஞ்சித்தும் ஒரு அரசியல் கதையை தயார் செய்து கார்த்தியின் சம்மதத்தையும் வாங்கிவிட்டாராம். கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போகும் ஆசையில் ஏற்கனவே நிறைய பேர் உள்ளனர். இதில் இவர் வேறா என்று கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் முணுமுணுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











