அண்ணனுக்கு அடுத்து தம்பியா?.. தப்பிப்பாரா கார்த்தி.. சிவாவின் அடுத்த பிளான் இதுதானாம்
சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்தச் சூழலில் கார்த்தி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.
நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்தன. குறிப்பாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகராக நிலைப்படுத்திக்கொண்டார்.
வந்தியத்தேன்: குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம்தான் அந்தப் படத்தில் மற்றவர்கள் ஏற்றிருந்த கதாபாத்திரத்தைவிட பரவலாக பேசப்பட்டது. அதற்கு காரணம் கார்த்தி அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்த அட்டகாசமான உழைப்புதான்.
ஜப்பான் படுதோல்வி: இந்தச் சூழலில் ராஜுமுருகன் இயக்கத்தில் தனது 25ஆவது படமாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார் கார்த்தி. குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் என்பதால் ராஜுமுருகனின் இயக்கத்திற்கென்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் படம் ரிலீஸானது. இதில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தப் படத்தின் தோல்வியை கார்த்தியே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

மெய்யழகன் கார்த்தி: அடுத்ததாக அவர் 96 இயக்குநர் பிரேம் இயக்கத்தில் மெய்யழகன் படத்தில் நடிதார். அதில் அவருடன் அரவிந்த் சாமி, தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த அந்தப் படம் கடந்த வருடம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியானது. இந்தப் படமோ மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முக்கியமாக பிரேமின் திரை மொழியும், கார்த்தியின் நடிப்பும் அவ்வளவு அட்டகாசமாக இருந்ததாக படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை வைத்தார்கள்.
அடுத்த படங்கள்: மெய்யழகனை முடித்த அவர் அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்யார் படத்தில் நடித்திருக்கிறார். அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் கங்குவா கொடுத்த அடியால் நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் திண்டாடிவருவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தவிர்த்து டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படம், லோகேஷ் இயக்கத்தில் கைதி 2 ஆகிய படங்களிலும் நடிக்கவிருக்கிறார்.
சிவாவுடன் கூட்டணி: இந்நிலையில் கார்த்தி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சமீபத்தில் கார்த்தியை சந்தித்து சிறுத்தை சிவா ஒரு கதை சொன்னதாகவும் அந்தக் கதை அவருக்கு பிடித்துவிட்டதால் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. கைதி 2வை முடித்துவிட்டு இந்தப் படத்தை சிறுத்தை சிவா ஆரம்பிப்பார் என்றும் தகவல்கள் கசிகின்றன. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சிவாவுடனான கூட்டணியில் கார்த்தி தப்பிப்பாரா இல்லை கங்குவா கதைதானா என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











