இவரு மனுஷன்யா..பிறந்தநாளுக்கு பேனர் வைத்த 3 பேர் பலி.. நேரில் சென்று ஆறுதல் கூறிய யாஷ்!
சென்னை: கேஜிஎஃப் படத்தின் மூலம் கொண்டாடப்படும் நடிகராக மாறிய நடிகர் யாஷின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் நேற்று கொண்டாடினார்கள். இந்த பிறந்த நாளுக்காக கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை கேள்விப்பட்ட யாஷ், படப்பிடிப்பை நிறுத்தி விட்டு, நள்ளிரவு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
நடிகர் யாஷ் 2007ம் ஆண்டு வெளியான ஜம்படா ஹுடுகி என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பெரிதாக வெளியில் தெரியாதபடி ஒரு சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷ், பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்திற்கு பிறகு உலகமே கொண்டாடும் நடிகராக மாறினார். இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

இரண்டு லட்சம் இழப்பீடு: இந்நிலையில், நடிகர் யாஷின் 38வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். அந்த வகையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் மூன்று ரசிகர்கள் யாஷின் பிறந்த நாளைக்கு பேனர் வைக்கும் வேளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இரும்பு சட்டத்துடன் இருந்த பேனர், சாலையில் சென்ற உயர் அழுத்த கம்பியை தொட்டதால், மின்சாரம் தாக்கியது. இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பலியாகினர், மற்றொருவர் லக்ஷ்மேஷ்வர் நகரில் உள்ள மருத்துவமனையில் இறந்தார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த ஹனுமந்த் ஹரிஜன், முரளி நடுவினாமணி மற்றும் நவீன் காஜி குடும்பத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளார்.

நேரில் ஆறுதல்: இந்த சோகமான சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகர் யாஷ், ஹூப்பள்ளிக்கு விமானம் மூலம் சூரனகி கிராமத்திற்கு வந்து இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய யாஷ், ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கான வாழ்க்கையை இழக்க வேண்டாம், நடிகர்களாகிய எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்காக உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள். பொறுப்புடன் செயல்படுங்கள் என்றார். மேலும், பேனர்கள் கட்டுவதை நிறுத்துமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆதங்கப்படும் ரசிகர்கள்: இந்த தகவல் காட்டுத்தீபோல பரவியது பலரும் யாஷை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியான போது,கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு அஜித் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை, குறைந்தபட்சம் ரசிகர்கள் இதுபோன்று செய்ய வேண்டாம் என்று கூட சொல்லவில்லை என்று இணையத்தில் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











