அம்மா மறைந்த பிறகு மௌனம் கலைத்த அஜித்.. ஏகே நொறுங்கி போயிட்டாரு
சென்னை: அஜித் இப்போது சினிமாவில் மட்டுமின்றி கார் ரேஸிலும் கவனம் செலுத்திவருகிறார். உலகம் முழுவதும் நடக்கும் பந்தயங்களில் தனது ஏகே ரேஸிங் டீமுடன் களமிறங்கி வெற்றியும் பெறுகிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவரது தாயார் மோகினி மணி தனது 89வது வயதில் உயிரிழந்தார். தாய் இறந்த செய்தி கேட்டு துடிதுடித்து போன அஜித் துபாயிலிருந்து சென்னை வந்து இறுதி சடங்குகளை செய்தார்.
அஜித் தனது ரூட்டை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மாற்றியிருக்கிறார். இத்தனை வருடங்களாக கார் ரேஸ் மீது ஆர்வம் கொண்டிருந்த அவர்; அவ்வப்போது அந்தப் போட்டிகளில் பங்கேற்று வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக தனது கவனத்தில் பெரும் பகுதியை அதில் மட்டுமே செலுத்திவருகிறார். அதற்காகத்தான் ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அதன் பலனாக கடந்த வருடத்தில் அவர் நடிப்பில் குட் பேட் அக்லி, விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின.

அடுத்த படம்: அவற்றில் குட் பேட் அக்லி மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. விடாமுயற்சி நிலைமையை சொல்லவே வேண்டாம். அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்கவிருக்கிறார். இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கலாம் என தெரிகிறது. மிக விரைவில் அந்தப் பட ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும்; அதற்குள் சில கார் ரேஸ்களில் ஏகே கலந்துகொள்ள பிளான் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தாய் மறைவு: இதற்கிடையே அஜித்தின் தந்தை சுப்ரமணியம் சில வருடங்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாகவும், உடல்நல குறைவு காரணமாகவும் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிறகு தன் தாய் மோகினியை கண்ணும் கருத்துமாக பார்த்துவந்தார் ஏகே. ஆனால் மோகினி தன் 89வது வயதில் சில நாட்களுக்கு முன்பு மூச்சை நிறுத்தினார். ஏகேவின் தாய் மறைவு செய்தியை கேட்டு முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அஜித்துக்கு ஆறுதல் கூறினார்கள்.
ஏகேவின் பதிவு: இந்நிலையில் அஜித்தின் ஏகே ரேஸிங் டீமுக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் பகிரப்பட்டிருக்கிறது. ரேஸிங் உடையில் அஜித் தயாராக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'கனத்த இதயத்துடன் மீண்டும் பணிக்கு திரும்பியிருக்கிறேன். வாழ்க்கை தொடர வேண்டுமே' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அஜித் கூறியதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. தாயை இழந்த சில நாட்களிலேயே தன்னுடைய வழிக்கு மீண்டும் திரும்பியிருக்கும் ஏகேவுக்கு பலரும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.
உருக்கமான அறிக்கை: முன்னதாக அஜித்தின் தாய் இறந்தபோது சகோதரர்களாகிய அஜித், அனில், அனுப் ஆகியோர் இணைந்து வெளியிட்டிருந்த அறிக்கையில், "எங்கள் மறைந்த தந்தையுடன் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக இனிய தம்பதியாக வாழ்வை வாழ்ந்தவர் அவர். அவர்கள் பகிர்ந்து கொண்ட அன்பான நினைவுகள் எங்களுக்கு என்றும் ஆறுதலையும் வலிமையையும் அளிக்கும். அவரது மறைவையொட்டி எங்களுக்கு வந்துகொண்டிருக்கும் அன்பான இரங்கல் செய்திகள், அனுதாபங்கள் மற்றும் நினைவுகூரல்களால் நாங்கள் நெகிழ்ந்திருக்கிறோம்.
இந்த நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவோ அல்லது செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்கவோ இயலாத சூழல் இருப்பதால், அதை புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பெற்றோர் அல்லது குடும்ப மூத்தோரை இழந்த துயரத்தை அனுபவித்தவர்கள் எங்கள் இந்த விருப்பத்தை மதிப்பார்கள் என்று நம்புகிறோம். அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு கற்றுக்கொடுத்த அமைதி, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவுகளை நாங்கள் போற்றுவோம்" என தெரிவித்திருந்தார்கள்.


Click it and Unblock the Notifications
