மகேஷ் பாபு மகள் பிறந்த நாள் கொண்டாட்டம்.. மகளுக்கு அன்பு முத்தம் கொடுத்து வாழ்த்து மழை பொழியுறாரே
ஹைதராபாத்: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் இரண்டாவது மகளான சிதாரா தனது 14-வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதையொட்டி மகளுக்கு கன்னத்தில் அன்பு முத்தம் கொடுக்கும் அழகிய புகைப்படத்தை நடிகர் மகேஷ் பாபு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துடன், "Forever my little star... no matter how much you grow. Happy 14 Sitara!!! Have the most amazing year ahead.... Love you always" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
மகேஷ் பாபுவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிதாராவும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நட்சத்திரக் குழந்தைகளில் ஒருவராக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இதனால், அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களும் தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், மகேஷ் பாபு தற்போது இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். வாரணாசி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம், இந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவாகும் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை கே.எல். நாராயணா தயாரித்து வருகிறார். ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் சாகசக் கதையாக உருவாகும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்து வருகிறார்.

படப்பிடிப்பு பகுதிகள்: இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஒடிஷா, கென்யா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது வாரணாசியிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் கங்கை கரையை மையமாகக் கொண்ட சில முக்கியமான காட்சிகள் அங்கு படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், படக்குழு எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது.
வாரணாசி படக்குழு: படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனும் முக்கிய வேடத்தில் இணைந்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்த ராஜமௌலி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
2027இல் ரிலீஸ்: ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படமும் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், மகேஷ் பாபுவின் முதல் பான்-வேர்ல்ட் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் மீதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications