பிரமாண்டமாக வெளியான வாரணாசி டைட்டில்.. இதுதான் கனவு படமா?.. உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மகேஷ் பாபு
சென்னை: மகேஷ் பாபு - ராஜமௌலி இணையும் படத்துக்கு வாரணாசி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கீரவாணி இசையமைக்க பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்தப் படம் புராண கால கதையாக உருவாகுமா இல்லை தற்காலத்தையும் சேர்த்து உருவாகுமா என்ற கேள்வி டீசரை பார்க்கையில் உருவாகிறது. இந்நிலையில் மகேஷ் பாபு நேற்று நடந்த விழாவில் பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது.
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள், ஆர்.ஆர்.ஆர் என மொத்தம் மூன்று பான் இந்தியா படங்களை இயக்கியவர் ராஜமௌலி. மூன்று படங்களுமே வசூலில் மைல் கல்லை உருவாக்கி வைத்திருக்கின்றன. முக்கியமாக இப்போதைக்கு அதிக பான் இந்தியா படங்கள் வருவதற்கு ஒருவகையில் பாதை அமைத்து கொடுத்தது இந்தப் படங்கள் எனலாம். இதன் காரணமாகத்தான் இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் ராஜமௌலி.
மகேஷ் பாபுவுடன் கூட்டணி: அவர் கடைசியாக இயக்கிய ஆர்.ஆர்.ஆர். இந்தியாவில் வசூல் வேட்டை செய்து ஆஸ்கர் வரைக்கும் சென்றது. படத்துக்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி ஆஸ்கர் விருதை வென்றார். விருது வென்றது மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்துக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அந்த பிரமாண்ட வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபுவுடன் இணைந்தார் ராஜமௌலி. அப்போதிருந்தே இப்படம் குறித்தும் படத்தின் பெயர் குறித்தும் எதிர்பார்ப்பு நிலவியது.

வாரணாசி: சூழல் இப்படி இருக்க நேற்று படத்தின் டைட்டில் டீசர் விழா வாரணாசியில் பிரமாண்டமாக நடைபெற்றது. படத்துக்கு வாரணாசி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. டைட்டில் டீசரில் புராண காலம், தற்காலத்தை காட்டுகிறார்கள். மேலும் ராமர், அனுமன் போன்றவர்களையும் காட்டுவதால் இது ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாகுமா இல்லை வேறு ஏதும் புராண கதையை தழுவி எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
டைம் ட்ராவலாக இருக்குமோ?: அதேசமயம் இது புராண கால கதையை மட்டும் தழுவி எடுக்கப்படாது. அப்படி எடுத்தால் கல்லா கட்டா முடியாது என்பதை ராஜமௌலி நன்றாகவே அறிந்திருப்பார். எனவே புராண காலம், சைன்ஸ் ஃபிக்ஷன், டைம் ட்ராவல் ஆகிய மூன்றையும் இணைத்து ஒரு புதிய உலகத்தையும், காலத்தையும் இதில் ராஜமௌலி உருவாக்குவார். நிச்சயம் இது பெரிய ரெக்கார்டுகளை படைக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகிறார்கள்.
மகேஷ் பாபு பேச்சு: இந்நிலையில் நேற்று நடந்த விழாவில் பேசிய மகேஷ் பாபு, "மகேஷ் பாபுவுடன் இணைந்திருக்கும் இப்படம் எனக்கு கனவு படம். வாழ்க்கையில் ஒருமுறை மட்டும்தான் இதுமாதிரியான வாய்ப்புகள் கிடைக்கும். இப்படத்தின் மூலம் நான் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். மிக முக்கியமாக என்னுடைய இயக்குநர் ராஜமௌலியை பெருமைப்படுத்துவேன். வாரணாசி படத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் எங்களை பார்த்து பெருமைப்படும்" என்றார். முன்னதாக இப்படத்தில் பணியாற்றுவதற்காக ராஜமௌலிக்கு 200 கோடி, மகேஷ் பாபுவுக்கு 100 கோடி, பிரியங்கா சோப்ராவுக்கு 30 கோடி, கீரவாணிக்கு 16 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கிறார்கள் என ஒரு பேச்சு ஓடுவது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











