தலையில் ஐஸ் தண்ணீர் கொட்ட வேண்டாம். மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றுங்கள் - மம்முட்டி
திருவனந்தபுரம்: தலையில் ஐஸ் தண்ணீரைக் கொட்டிக் கொள்வதை விட்டுவிட்டு, மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுங்கள், என்று நடிகர் மம்முட்டி கூறியுள்ளார்.
அத்துடன் மரக்கன்றுகள் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மரம் நட்டு தண்ணீர் ஊற்றும் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஐஸ் பக்கெட் சவால்
‘ஏ.எல்.எஸ்.' என்று அழைக்கப்படும் நரம்பு தொடர்பான நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை திரட்டவும், உலக அளவில் ‘ஐஸ் பக்கெட்' சவால் விடப்பட்டுள்ளது.
அதன்படி, பக்கெட்டில் ஐஸ் கட்டிகள் போடப்பட்ட குளிர்ந்த நீரை தலையில் ஊற்றிக் குளித்து அந்த காட்சியை வீடியோவாக எடுத்து பேஸ் புக்கில் வெளியிட்டு மற்றவர்களுக்கு இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி நன்கொடை திரட்ட வேண்டும்.

பிரபலங்களின் குளியல்
இந்த சவாலை ஏற்று அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக சேவகர்கள் என்று பலர் நன்கொடை வழங்கி வருகிறார்கள். இந்தியாவிலும் இந்த ஐஸ் பக்கெட் குளியல் சவால் பிரபலம் அடைந்து வருகிறது.
நடிகை ஹன்சிகா, இந்தி நடிகை பூனம் பாண்டே, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா என்று பிரபலங்கள் ஐஸ் கட்டி நீரில் குளித்து அதை பேஸ் புக்கில் வெளியிட்டுள்ளனர்.

ரைஸ் பக்கெட்
இதைத் தொடர்ந்து சிலர் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற பெயரில், ஏழைகளுக்கு ஒரு பக்கெட் அரிசி வழங்கும் சவாலை அறிமுகப்படுத்தினர். இதற்கும் பெரிய வரவேற்பு, விளம்பரம் கிடைத்தது.

மை ட்ரீ சேலஞ்ச்
இதையெல்லாம் பார்த்த பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ‘மை ட்ரீ சேலஞ்ச்' என்ற புதிய சவாலை அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு மரக்கன்றை நட்டு அதை பராமரிக்க வேண்டும். உலகம் வெப்பமயமாகலை தடுப்பதற்காகவும் மரம் வளர்த்து பூமியை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் இதை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளார்.

உங்களால் முடியுமா ரசிகர்களே...
தன் வீட்டு தோட்டத்தில் மரக்கன்று நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றுவதுபோல வீடியோ எடுத்து பேஸ் புக்கில் நடிகர் மம்முட்டி வெளியிட்டுள்ளார். www.facebook.com/My Tree challenge. என்ற பக்கத்தில் இது வெளியாகி உள்ளது. நான் ஒரு மரக்கன்று நட்டு உள்ளேன். உங்களால் இது முடியுமா? என்று நடிகர் மம்முட்டி சவால் விட்டு இந்த திட்டத்திற்கு ரசிகர்களுக்கு அழைத்து விடுத்துள்ளார்.

சக நடிகர்களுக்கும்...
மேலும் இந்தி நடிகர் ஷாருக்கான், தமிழ் நடிகர்கள் விஜய், சூர்யா போன்றோருக்கும் மம்முட்டி இதை அவர்களது ரசிகர்கள் மூலம் செயல்படுத்தும்படி சவாலுடன் கூடிய அழைப்பு விடுத்துள்ளார். ‘‘தலையில் ஐஸ் கட்டி தண்ணீர் கொட்ட வேண்டாம். மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்'' என்ற கருத்துடன் மம்முட்டி வெளியிட்டுள்ள மரக்கன்று நடும் வீடியோவுக்கு அவரது பேஸ் புக்கில் சில மணி நேரங்களிலேயே பல ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களும்
அவரது ரசிகர்கள் தங்கள் வீடுகளில் மரக்கன்று நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றுவதுபோல வீடியோ எடுத்து பேஸ் புக்கில் வெளியிட்டு வருகிறார்கள்.

இதையும் சேர்த்துக்குங்க...
எல்லாம் நல்ல விஷயம்தான்... கூடவே பொது இடங்களை அசுத்தப் படுத்த மாட்டோம், ப்ளாஸ்டிக் பைகள், குப்பைகளை கண்ட இடங்களில் போட மாட்டோம்... நீர்நிலைகளைக் காப்போம் போன்ற விஷயங்களுக்காகவும் புதுப் புது சவால்களை, மற்ற நடிகர்கள் - பிரபலங்கள் அறிமுகப்படுத்தலாமே!


Click it and Unblock the Notifications











