மோகன்லாலை ஓட ஓட விடாமல் துரத்தும் சர்ச்சைகள்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் மோகன்லாலை தொடர்ந்து சர்ச்சைகள் துரத்தி வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பல காலமாக மலையாள திரை உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஹீரோ மோகன்லால். லால் ஏட்டன் என்று மலையாள திரை உலகினர் அவரை செல்லமாக அழைக்கிறார்கள். மோகன்லால் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகிவிட்டது.
அப்படி அவர் எத்தனை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் என்று கேட்டால் இதை படியுங்கள், உங்களுக்கே தெரியும்.

லாலிசம் இசைக்குழு
கேரளாவில் நடந்த 35வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் மோகன்லாலுக்கு சொந்தமான லாலிசம் குழு இசை நிகழ்ச்சி நடத்தியது. அந்த நிகழ்ச்சி படுமோசமாக இருந்ததாக பலரும் விமர்சித்தனர். பதிவு செய்யப்பட்ட பாடல்களை பின்னால் ஓடவிட்டு இசைக்குழுவினர் தப்புத் தப்பாக வாயசைத்து சிக்கினார்கள்.

பணம்
ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் காய்ச்சி எடுத்ததால் லாலிசம் இசைக்குழு நிகழ்ச்சி நடத்த தான் வாங்கிய தொகையை மோகன்லால் கேரள அரசிடமே திருப்பிக் கொடுத்தார். அந்த பணத்தை விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியருக்கு செலவு செய்ய அரசு முடிவு செய்தது.

சஞ்சய் தத்
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் மோகன்லால்.

யானை தந்தம்
வருமான வரித்துறையினர் மோகன்லாலின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்கள் சிக்கின. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிகரெட்
2012ம் ஆண்டு ரிலீஸான கர்ம யோதா படத்தின் போஸ்டரில் மோகன்லால் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இருந்தது. இதற்காக அவர் சர்ச்சையில் சிக்கினார்.

மது
2007ம் ஆண்டு மோகன்லால் பிரபல மதுபான பிராண்டின் விளம்பரத்தில் நடித்தார். அந்த விளம்பரம் எந்த அளவுக்கு பிரபலம் ஆனதோ அந்த அளவுக்கு மோகன்லாலுக்கு பிரச்சனையும் ஏற்பட்டது.

ராணுவ உடை அவமதிப்பு
கடந்த 2008ம் ஆண்டு மோகன்லாலுக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பட்டத்தை ராணுவம் வழங்கி சீருடையும் அளித்தது. இதையடுத்து கேரள சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் விளம்பரத்தில் அவர் ராணுவ உடையில் வந்தார். இதனால் அவர் ராணுவ உடையை அவமதித்துவிட்டதாக புகார்கள் எழுந்தன.

சரிதா நாயர்
சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள கேரள தொழில் அதிபர் சரிதா நாயர் மோகன்லால் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக சிறையில் இருக்கையில் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











