ஜூனியர் என்டிஆரைக் கொல்ல முயற்சி.. மர்ம நபர் துப்பாக்கியுடன் தப்பி ஓட்டம்
ஹைதராபாத்: முன்னணி தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரைக் கொல்ல முயன்ற மர்ம நபர் துப்பாக்கியுடன் தப்பி ஓடினான்.
மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் பேரனும் பிரபல தெலுங்கு நடிகருமான ஜூனியர் என்.டி.ஆருக்கு எதிராக தெலுங்கானா ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா பகுதியில் ஜூனியர் என்.டி.ஆர். படங்களை திரையிடக் கூடாது என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஹைதராபாத் நகரில் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜூனியர் என்.டி.ஆர் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர் கையில் துப்பாக்கியுடன் புகுந்தான். வீட்டின் மதில் சுவரை ஏறி குதித்து மெதுவாக நடந்து போனவனை காவலுக்கு நின்ற பாதுகாவலர்கள் பார்த்து விட்டனர். அவனைப் பிடிக்க முயற்சித்த போது துப்பாக்கியுடன் மர்ம மனிதன் ஓடிவிட்டான்.
வெளியே நிறுத்தி வைத்திருந்த நம்பர் பிளேட் இல்லாத வண்டியில் ஏறி அவன் தப்பித்ததாக காவலர்கல் தெரிவித்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் ஜூனியர் என்.டி.ஆர். புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியைத் தேடி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











