சமந்தாவுடனான விவாகரத்துக்கு என்ன காரணம்?.. நான் குற்றவாளியா?.. மௌனம் கலைத்த நாக சைதன்யா
சென்னை: சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் நடைபெற்றது. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென பிரிவதாக அறிவித்தார்கள். அந்தப் பிரிவுக்கு பிறகு சமந்தா சிங்கிளாக இருக்கிறார். அதேசமயம் நாக சைதன்யாவோ நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கடந்த ஆண்டு நடந்தது. இந்தச் சூழலில் சமந்தாவுடனான பிரிவு குறித்து நாக சைதன்யா மனம் திறந்து பேசியிருக்கிறார்.
நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். அப்போது தனக்கு ஜோடியாக நடித்த சமந்தாவுடன் காதலில் விழுந்தார். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அந்தத் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு சமந்தா தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.

ஆரம்பித்த பிரச்னை: ஆனால் திருமணத்துக்கு பிறகு சமந்தா நடிப்பில் மாமனார், மாமியாருக்கு இஷ்டம் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் நடிப்பதில் ஆர்வம் குறையாததால் சமந்தாவும் தொடர்ந்து நடித்துவந்தார். ஒருகட்டத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவிடம் நடிப்பதை நிறுத்துமாறு கூறியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. அதேபோல் திடீரென சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோயும் வந்தது. இவையெல்லாம் ஒன்று சேர்ந்து இரண்டு பேருக்குமிடையே பிரச்னையை ஆரம்பித்து வைத்ததாக தெலுங்கு திரையுலகில் தகவல் கசிந்தது.
விவாகரத்து: அதனைத் தொடர்ந்து சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் இரண்டு பேரும் வெளியிட்ட அறிவிப்பில், தாங்கள் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதாக தெரிவித்தார்கள். அவர்களின் அந்த அறிவிப்பு பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிவுக்கு பிறகு மையோசிடிஸ் நோய்க்காக சமந்தா சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார். இடையில் நடிப்பதை நிறுத்தியிருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவர் சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்திருந்தார்.
இரண்டாவது திருமணம்: நாக சைதன்யாவோ சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணம் கடந்த வருடம் நடந்தது. சமந்தாவை பொறுத்தவரை இப்போதுவரைக்கும் சிங்கிளாக இருக்கிறார். அதேசமயம் இயக்குநர் ராஜை அவர் காதலித்துவருவதாகவும்; இரண்டு பேரும் டேட்டிங் செல்வதாகவும் ஒரு தகவல் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் நாக சைதன்யா.
சைதன்யாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நானும் சமந்தாவும் எங்களது சொந்த காரணங்களுக்காகத்தான் விவாகரத்து என்ற முடிவை எடுத்தோம். நாங்கள் ஒருவருக்கொருவரை இன்னமும் மதித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த விஷயத்தில் இன்னும் என்ன விளக்கம் தேவை என்று எனக்கு புரியவில்லை. திருமண உறவிலிருந்து பிரிந்து நாங்கள் இரண்டு பேரும் எங்களது சொந்த வாழ்க்கையை வாழ்ந்துவருகிறோம். இருப்பினும் என்னை ஏன் குற்றவாளி போல் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை" என்றார். முன்னதாக சமந்தா சில நாட்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொண்டு வாழ்ந்தால்தான் முழுமையான வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். திருமண உறவிலிருந்து வெளியே வந்து தனியாக இருந்தால் சோகமாக பார்க்கிறார்கள். அப்படி பார்க்க ஒன்றும் அவசியம் இல்லை என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











