சமந்தாவுக்கு துரோகம் செய்து ஏமாற்றினேனா?.. வழக்கு தொடர்ந்திருக்கும் நாக சைதன்யா.. மீண்டும் பஞ்சாயத்து
ஹைதராபாத்: நாகார்ஜுனாவின் மூத்த மகனும், நடிகருமான நாக சைதன்யா முதலில் சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண உறவு பாதியில் முறிந்தது. அதனையடுத்து நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். சமந்தாவும் கடந்த வருடத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே சமந்தாவை நாக சைதன்யாதான் ஏமாற்றினார் என தொடர்ந்து அவருக்கு எதிராக ஒரு கருத்து வைக்கப்பட்டுவந்தது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்கும், அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் நாக சைதன்யா. இவரும் டோலிவுட்டில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். வெற்றி, தோல்வி என இரண்டையும் பார்த்துவரும் அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கின்போது தனக்கு ஜோடியாக நடித்த சமந்தாவை காதலித்தார். அவர்களது காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு அவர்களது திருமணம் கோவாவில் வைத்து நடந்தது.

பிரிந்த சமந்தா - சைதன்யா: திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துவந்தார். அதற்கு நாக சைதன்யாவும் சப்போர்ட்டாகத்தான் இருந்தார். ஆனால் திடீரென அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. அந்த மனஸ்தாபம் நாளடைவில் பெரிதாகி பெரிதாகி விவாகரத்தில் சென்று முடிந்தது. இனிமேலும் சேர்ந்து வாழ முடியாது என்று முடிவெடுத்த அவர்கள் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். நாக சைதன்யா தரப்பிலிருந்து தருவதாக சொன்ன ஜீவனாம்சத்தையும் சமந்தா ஏற்க மறுத்துவிட்டதாக அந்த சமயத்தில் தகவல் ஓடியது நினைவுகூரத்தக்கது.
இரண்டாவது திருமணம்: சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. முதல் திருமண முறிவால் மன உளைச்சலில் இருந்த தனது மகனின் வாழ்க்கையை சீர் செய்ய இந்தக் காதல் உதவும் என்று நம்பிய நாகார்ஜுனா, இந்தக் காதலுக்கும் சம்மதம் தெரிவித்தார். பிறகு பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. நாக சைதன்யா போன்றே கடந்த வருடத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து சமந்தாவும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
தொடர்ந்து கருத்து: இரண்டு பேரும் வெவ்வேறு திருமணம் செய்துகொண்டு தங்களது வாழ்க்கையிலும், கரியரிலும் கவனத்தை செலுத்திவருகிறார்கள். ஆனால் சமந்தா ரசிகர்கள் என சொல்லிக்கொள்ளும் ஒருதரப்பினர் தொடர்ந்து சைதன்யாவுக்கு எதிரான கருத்தை முன்வைத்துவருகிறார்கள். அதாவது முதல் திருமணத்தில் சமந்தாவை நாக சைதன்யாதான் ஏமாற்றிவிட்டார் என்று பல கருத்துக்களை கூறினார்கள். இந்நிலையில் அப்படி பதிவிட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் சைதன்யா.
வழக்கு விவரம்: அதாவது டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்திருக்கும் வழக்கில், 'என்னுடைய முன்னாள் மனைவி மற்றும் என்னுடைய பெயரை குறிப்பிட்டு பொய்யான தகவல்களை தொடர்ந்து பரப்பும் யூடியூபில் இருக்கும் வீடியோக்களை நீக்க வேண்டும். என் பெயரை பயன்படுத்தி ஆபாச இணையதளங்களில் வீடியோக்களும் வருகின்றன. அவற்றையும் நீக்க வேண்டும். இதை பெர்சனாலிட்டி ரைட்ஸ் பாதுகாக்க மட்டுமே வழக்காக பதிவு செய்திருக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார். நேற்று இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட தளங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
