கூலி படம் எப்படி இருக்கும்?.. மனம் திறந்து பேசிய நாகார்ஜுனா.. சம்பவம் லோடிங்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன்களான நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய இரண்டு பேருமே நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நாகார்ஜுனா முதலில் லட்சுமி என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். பிறகு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தந்தை போலவே மகன் நாக சைதன்யாவும் சமந்தாவை திருமணம் செய்து பிறகு பிரிந்து தற்போது சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். நாகார்ஜுனா இப்போது தமிழில் கூலி, குபேரா ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் இரண்டு படங்களும் ரிலீஸாக்விருக்கின்றன.
தெலுங்கு திரையுலகின் அடையாளங்களில் ஒருவர் நாகேஸ்வர ராவ். முன்னணி ஹீரோவாக தெலுங்கு சினிமாவில் வலம் வந்த அவர் தயாரிப்பாளராகவும் ஜொலித்தவர். அவரது மகன் நாகார்ஜுனாவும் தனது தந்தை போலவே சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார். 1986ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அவரது அழகும், திறமையும் அவருக்கு நிலையான இடத்தை டோலிவுட்டில் பெற்றுக் கொடுத்தது.
தமிழிலும் நாகார்ஜுனா: தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் அவர் படங்களில் நடித்திருக்கிறார். முதன்முதலில் பிரவீன் காந்தி இயக்கத்தில் ரட்சகன் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் மூலம் தமிழிலும் அவருக்கென்று ரசிகர்கள் உருவாக தொடங்கினார்கள். ஆனால் அதற்கு பிறகு பெரிதாக எந்தத் தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதேசமயம் அவர் தமிழில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துகொண்டே இருந்தன.

ரஜினிகாந்த்துடன் நாகார்ஜுனா: சூழல் இப்படி இருக்க தற்போது ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இப்படத்தில் அவருடன் நாகார்ஜுனா, அமீர் கான், சத்யராஜ், சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் என பலர் நடித்திருக்கிறார்கள். இதில் நாகார்ஜுனா நடித்திருப்பதாலும் படத்தின் மீது பன்மடங்கு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நிச்சயாம் அவருக்கு வெயிட்டான ரோலைத்தான் லோகேஷ் கொடுத்திருப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குபேரா நாகார்ஜுனா: கூலி மட்டுமின்றி சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் குபேரா படத்தில் நாகார்ஜுனா முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். சமீபத்தில் வெளியான டீசரில்கூட நாகார்ஜுனாவின் நடிப்பை பார்த்து பலரும் பிரமித்தார்கள். இப்படமானது ஜூன் 20ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நீண்ட வருடங்கள் கழித்து வரிசையாக நாகார்ஜுனா இரண்டு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். எனவே தொடர்ந்து அவர் கோலிவுட்டில் முக்கியமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பார் என்ற பேச்சும் பலமாகவே எழுந்திருக்கிறது.
நாகார்ஜுனா பேட்டி: இந்நிலையில் கூலி மற்றும் குபேரா ஆகிய படங்களில் நடித்தது தொடர்பாக சமீபத்தில் பேட்டியளித்த நாகார்ஜுனா, "கூலி படத்தில் ரஜினியுடன் நடித்தது நல்ல அனுபவம். மகிழ்ச்சியாக இருந்தது. படத்தை ரசிகர்கள் பார்க்கும்போது கண்டிப்பாக பல சீன்களுக்கு பலமாக கைகளை தட்டுவார்கள். அந்த அளவுக்கு லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அதேபோல் குபேரா படத்திலும் எனது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. அதில் தனுஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். எனது கேர்க்டர்களுக்கு முக்கியத்துவம் இருந்தால்தன் படத்தில் நடிக்க ஒத்துக்கொள்வேன்.அப்படித்தான் கூலி, குபேரா ஆகிய படங்களில் நடிப்பதற்கு நான் ஒத்துக்கொண்டேன்" என்றார். அவரது இந்தப் பேட்டி இவ்விரண்டு படங்களின் மீதும் அதீத எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











