புதுமையான கதைகளின் நம்பிக்கை நாயகன்: பர்த்டே பாய் அருள்நிதிக்கு வாழ்த்துகள்!
சென்னை: புதுமையான கதைகளை தேர்வுசெய்து நடித்து வரும் நடிகர் அருள்நிதியின் 34வது பிறந்ததினம் இன்று.
குறைவான படங்களில் நடித்திருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே முதல் விருப்பமாக கொண்டுள்ளார் அருள்நிதி.
இயல்பான உடல்மொழி, மிகை இல்லாத நடிப்பின் மூலம் திரையுலகில் ஆழமாக தடம் பதித்து வரும் அருள்நிதிக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2010ம் ஆண்டு வெளியான 'வம்சம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அருள்நிதி, இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். குறைவான படங்களில் நடித்திருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கலக்கி வரும் அருள்நிதிக்கு, ரசிகர்கள் உட்பட திரை பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நின்னு பேசும் மெளன குரு
வம்சம், உதயன் படங்களில் நடித்திருந்த அருள்நிதிக்கு, ரசிகர்களிடம் போதிய அறிமுகம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'மெளன குரு' திரைப்படம் 2016ல் வெளியானது. புதுமையான கதைக்களம், வித்தியாசமான திரைமொழி என யாரும் நடிக்கத் தயங்கும் பாத்திரத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார். போலீஸாரால் உளவியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் அருள்நிதி, அதன் மூலம் சந்திக்கும் பிரச்சினைகளை நுட்பமாக விவரித்தது இத்திரைப்படம்.

தரமான பாத்திரம்
உண்மையில் 'மெளன குரு' படத்தில் அருள்நிதி நடித்திருந்த கருணாகரன் என்ற பாத்திரம், தமிழ் சினிமா கண்ட பாத்திரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இயக்குநரின் கைகளில் தன்னை ஒப்படைத்துவிட்டு அருள்நிதி எடுத்த இந்த முடிவு, ரசிகர்களை வியக்க வைத்தது. மனப்பிறழ்வு கொண்டவர்களை இந்தச் சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை, அருள்நிதியின் பாத்திரம் கண்முன்னே கொண்டுவந்தது.

தூள் கிளப்பிய டிமான்டி காலனி
அருள்நிதியின் நடிப்பிற்கு இன்னொரு சவாலாக அமைந்தது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி.' அட்டகாசமான ஹாரர் திரில்லர் ஜானரில் உருவான இத்திரைப்படத்தில் அருள்நிதியின் ஸ்ரீனி பாத்திரம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. பேய்களை வேட்டையாடும் நாயகர்கள் மத்தியில், அதற்கு அஞ்சி குலைநடுங்கும் யதார்த்தமான ஹீரோவாக ஸ்கோர் செய்தார்.

காமெடிக்கும் இவரு ஃபேமஸ் தான்
ஒருபக்கம் 'மெளன குரு', 'டிமான்டி காலனி' போன்ற சீரியஸான படங்களில் நடித்த அருள்நிதி, இன்னொரு பக்கம் 'ஒரு கன்னியும் மூனு களவாணிகளும்,' 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' என காமெடி படங்களிலும் தலையைக் காட்டினார். இப்படங்களில் அவர் கொஞ்சம் இறுக்கமான உணர்ச்சிகளோடு நடித்திருந்தாலும், காமெடிக் காட்சிகளில் முடிந்தவரை சிறப்பாகத் தோன்றினார்.

தொடரட்டும் வேட்டை
புதுமையும் வித்தியாசங்களும் நிறைந்த கதைகளை முதல் சாய்ஸாக கொண்டுள்ள அருள்நிதியின் நடிப்பில், அடுத்தடுத்து 'தேஜாவு,' 'டைரி' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்தப் படங்களும் வெற்றிபெற வேண்டும் என அருள்நிதியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











