கோமாவில் இருந்தாலும் என் மகன் மறக்காத ஒரு பெயர் விஜய் .. நாசர் எமோஷனல்
சென்னை: விஜய் கடைசியாக GOAT திரைப்படத்தில் நடித்தார். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்துக்கு தளபதி 69 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தோடு சினிமாவுக்கு குட் பையும் சொல்கிறார் விஜய். அடுத்ததாக அவரது முழு கவனமும் அரசியலில் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் இன்றுகூட ஆளுநரை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க விஜய் குறித்து நாசர் பேசியிருக்கிறார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய்தான் இப்போது அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோக்களில் ஒருவர். குறிப்பாக ரஜினியின் இடத்தை அவர் பிடிப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாக திரை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகத்தான் விஜய்க்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் சம்பளத்தை கொட்டி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.

தந்தையின் துணை: இப்படி விஜய்யின் கோட்டை பலமாக இப்போது இருந்தாலும் அதற்கான ஒவ்வொரு செங்கல்லையும் வைக்க ஆரம்பித்தவர் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்க்காக கதை கேட்பது, சிறந்த கதைகள் வைத்திருக்கும் இயக்குநர்களை விஜய் பக்கம் மடைமாற்றுவது என சந்திரசேகர் செய்த விஷயங்கள் ஏராளம். அவரது பக்கபலம் இருந்ததால்தான் எந்த வித சிக்கலும் இல்லாமல் சினிமாவில் விஜய்யால் நிலைக்க முடிந்தது என்று ஒருசிலர் கூறுவதுண்டு.
அவமானங்களை சந்தித்த விஜய்: நடிகராக உள்ளே நுழைந்து தற்போது அரசியல் ஆசையில் இருக்கும் விஜய்க்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட சோதனைகள் வந்தன. இவரது முதல் படமான நாளைய தீர்ப்பு வெளிவந்த பிறகு விஜய்யை உருவ கேலி செய்து ஒரு பத்திரிகை எழுதியது. இதுபோல் பல விமர்சனங்களையும், அசிங்கங்களையும் விஜய் சந்தித்திருக்கிறார். ஆனால் அவை எவற்றையுமே தடைக்கல்லாக பார்க்காமல் படிக்கல்லாக பார்த்து தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருந்தார்.
தமிழக வெற்றிக் கழகம்: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். கடைசியாக GOAT படத்தில் நடித்த அவர்; அடுத்ததாக ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இப்போதே முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் அவர். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாசர் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்து நடிகர் நாசர் சில விஷயங்களை பேசியிருக்கிறார். தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனது மூத்த மகனுக்கு ஒரு விபத்து நடந்தது. அதன் காரணமாக 14 நாட்கள் கோமாவுக்கு சென்றுவிட்டார். இரண்டு வாரங்கள் கழித்து கோமாவிலிருந்து வெளியே வந்த அவர் அப்பா என்றோ அம்மா என்றோ கூறவில்லை. விஜய் என்றுதான் கூறினார். அதனையடுத்து இந்த விஷயம் அவருக்கு தெரிந்தவுடன் உடனடியாக வீட்டுக்கு வந்து எனது மகனை சந்தித்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











