சினிமாவிற்குள் வந்ததும் ரஜினி இடத்தை அடைய நினைப்பது தப்பு: எஸ்.ஜே.சூர்யா அட்வைஸ்
சென்னை: சினிமாவுக்குள் வந்த உடனேயே ரஜினி இடத்தை அடைய நினைப்பது தவறு எனத் தெரிவித்துள்ளார் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், படைப்பாளிகளையும், குறும்பட இயக்குநர்களையும், திரைப்பட ஆர்வலர்களையும், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற திறமைசாலிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் நோக்கத்துடன் ‘ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
நேற்று சென்னையில் இந்நிறுவனத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் சித்தார்த், விஜய் சேதுபதி, சிம்ஹா, இயக்குநர் பாலாஜி மோகன், தயாரிப்பாளர் சி.வி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் எஸ்.ஜே. சூர்யா பேசியதாவது:-

நமது வீக்னஸ்...
நாம தியேட்டர் சைடு தான் ரொம்ப வீக்கா இருக்கோம். அந்த உண்மையை ஒப்புக்கிட்டுத்தான் ஆகணும்.
தப்பு சொல்ல முடியாது...
இங்க பெரிய ஹீரோக்களோட படங்கள் தவிர மற்ற ஹீரோக்களோட படங்களுக்கு அவ்வளவா தியேட்டர்கள் கிடைக்க மாட்டேங்குது. அது உண்மைதான். ஆனா அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.
தப்பான ஆசை...
இப்போ ரஜினி படம் ரிலீசாகுதுன்னா அதே அளவு தியேட்டர்கள் என்னோட படத்துக்கும் கெடைக்கணும்னு ஆசைப்படுறது தப்பு.
உழைப்பு தான் காரணம்...
ஒரு சாதாரண பஸ் கண்டக்டரா இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி இன்னைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கார்னா அதுக்கு அவரோட உழைப்பு ஒரு காரணம்.
பல வருட உழைப்பு...
பல வருடங்கள் உழைப்பு அதுக்கு பின்னாடி இருக்கு. அப்படிப்பட்டவர் இடத்துக்கு சினிமாவுக்குள்ள வந்த உடனே வர ஆசைப்படுறது தப்பு. அவரோட படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கிற மாதிரியே என்னோட படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கணும்னு ஆசைப்படுறதும் தப்பு" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











