'நோ.. பாலிடிக்ஸ் ப்ளீஸ்.. இப்போது பேச விரும்பவில்லை' - கோவாவில் ரஜினிகாந்த் பேட்டி
பனாஜி: நோ பாலிடிக்ஸ்... அரசியல் பத்தி பேச விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று பனாஜியில் பேட்டியளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த ஆண்டின் சிறந்த திரைப் பிரபலம் என்ற சிறப்பு விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய சினிமா நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதையொட்டி உருவாக்கப்பட்டுள்ள விருது இது.

இன்று கோவாவில் தொடங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதினை அமிதாப் பச்சன் முன்னிலையில் ரஜினிக்கு வழங்குகிறது மத்திய அரசு.
இதற்காக இன்று கோவாவில் உள்ள பனாஜி விமான நிலையத்தில் வந்திறங்கினார் ரஜினி. அவரிடம் தனியார் தொலைக்காட்சி சேனலான என்டிடிவி அவரது அரசியல் திட்டம் குறித்து கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த ரஜினி, 'இல்லை.. அரசியல் பற்றி இப்போது எதுவும் பேச விரும்பவில்லை," என்றார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த லிங்கா இசை வெளியீட்டு விழாவில் "அரசியலில் இறங்க எனக்கு பயமில்லை.. ஆனால் தயக்கமிருக்கிறது. அதனால்தான் ஆண்டவன் முடிவுக்குக் காத்திருக்கிறேன்," என்றார்.
இதைத் தொடர்ந்து தமிழக மீடியா மற்றும் கருத்து சொல்லிகள் பரபரப்பு கிளப்பி வந்தனர். பல்வேறு விவாதங்கள் அரங்கேறின.
இந்த நிலையில் அரசியல் பற்றி இப்போது பேச விரும்பவில்லை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம், அவரது இந்த சிறு பேட்டியை, எனக்கு அரசியலே வேண்டாம் என ரஜினி கூறியதாக அந்த தொலைக்காட்சியின் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











