எனக்கு தமிழர்கள் முக்கியம்! - மம்முட்டி

இலங்கையில் நடக்கும் ஐஃபா விழாவில் பங்கேற்க இந்திய திரை நட்சத்திரங்களுக்கு அழைப்பு மேல் அழைப்புவிடுத்து வருகிறது இலங்கை அரசும் ஐஃபா நிறுவனமும்.
இந்த விழாவுக்கு ஃபிக்கி எனப்படும் இந்திய தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு வணிக ஆதரவு தந்துள்ளது. இலங்கை அரசு 9 மில்லியன் டாலர்களை இந்த விழாவுக்கு செலவழிக்கிறது. ஆனால் 126 மில்லியன் டாலர் வருவாய்க்கு ஃபிக்கி நிறுவனம் உத்தரவாதமளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உண்மை வெளியில் தெரிய வந்தபிறகே, தமிழ் உணர்வாளர்கள் ஃபிக்கிக்கு எதிராகவும் அதில் பொறுப்பு வகிக்கும் நடிகர் கமல்ஹாஸனுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஃபிக்கி அமைப்பு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கமல் அறிவித்திருந்தாலும், வணிக ஆதரவை ஃபிக்கி விலக்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், தமிழ்த் திரையுலகில் ரஜினி உள்ளிட்ட யாரும் இந்த விழாவில் பங்கேற்கமாட்டார்கள் என முதலிலேயே அறிவிக்கப்பட்டது. அமிதாப்பின் குடும்பத்திலிருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்து தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பினர், இந்த விழாவுக்கு இந்திய நட்சத்திரங்கள் யாரும் போகக் கூடாது என்றும் அப்படிச் செல்பவர்களின் படங்களை தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் திரையிட விடமாட்டோம் என்றும் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பாலிவுட்டின் முதல்நிலை நடிகர் ஷாரூக்கானும் இந்த விழாவுக்குப் போவதைத் தவிர்த்துவிட்டார்.
சல்மான்கான், ஹ்ரித்திக் ரோஷன், லாரா தத்தா என சிலர் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இன்னொரு பக்கம் தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் மம்முட்டி, மோகன்லால், புனித் ராஜ்குமார், வெங்கடேஷ் போன்றவர்கள் ஐஃபா விழாவில் பங்கேற்கமாட்டோம் என தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மம்முட்டியிடம் கருத்து கேட்டபோது, இந்த விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். ஆனால் இது தமிழரின் உணர்வுகளுக்கு எதிரானதாக ஏற்கெனவே எனக்குத் தெரிந்திருந்தது. எனவே இந்த விழாவுக்குப் போவதில்லை என முடிவெடுத்து அறிவித்துள்ளேன். தமிழர்கள் எனக்கு முக்கியம். சென்னை எனக்கும் சொந்த நகரம்தான். தமிழர்களோடு இரண்டறக் கலந்த நான் அவர்களைப் புண்படுத்தும் ஒரு நிகழ்வில் பங்கேற்பேன் என எதிர்ப்பார்ப்பது தவறு என்றார்.


Click it and Unblock the Notifications











