போதை பொருள் வழக்கு.. கைதாகும் இன்னொரு நடிகர்?.. விரைந்தது தனிப்படை.. திரையுலகில் பரபரப்பு
சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் தடை செய்யப்பட்ட கொக்கைன் போதை பொருளை பயன்படுத்தியதற்காக சில நாட்களுக்கு முன்பு கைது செய்யபட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு முதல் வகுப்பு சிறை வழங்கப்பட்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்த விஷயத்தில் இன்னொரு நடிகருக்கும் தொடர்பிருப்பதாக ஸ்ரீகாந்த் கூறியதை அடுத்து அந்த நடிகை பிடிக்க தனிப்படை விரைந்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகையே உச்சக்கட்ட அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது நடிகர் ஸ்ரீகாந்த்தின் கைது. திரை பிரபலங்கள் பார்ட்டிகளில் பங்கேற்பது வழக்கம். ஆனால் அதில் கொக்கைன் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக பலரும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார்கள். இப்போது இந்த கைது அதை உறுதி செய்திருக்கிறது. முக்கியமாக பல நடிகர்கள் இதில் சிக்கலாம் என்றும் தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
ஸ்ரீகாந்த் விவகாரம் என்ன?: அதிமுகவின் ஐடி பிரிவு நிர்வாகி பிரசாத் என்பவரை அடிதடி வழக்கில் கைது செய்த போலீஸார்; அவர் மூலம் போதை பொருள் வியாபாரி பிரதீப் என்பவரையும் கைது செய்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீகாந்த்துக்கு பிரசாத் மூலம் தான் கொக்கைன் கொடுத்திருப்பதாகவும்; அவர் கொக்கைன் பயன்படுத்தியதை நானே நேரில் பார்த்திருக்கிறேன் என்று வாக்குமூலம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிரடி கைது: அதனையடுத்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு ஸ்ரீகாந்த்தை வரவைத்து போலீஸ் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. அதன் காரணமாக அதிரடியாக கைது செய்யப்பட்டார். தான் கைதானதைத் தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார் ஸ்ரீகாந்த். ஆனால் அதற்கு திட்டவட்டமாக மறுத்து புழல் சிறையில் அவரை தள்ளியது நீதிமன்றம்.
இன்னொரு நடிகரும்: இந்த விவகாரத்தில் இன்னொரு நடிகரும் சிக்கியிருக்கிறார் என்று கூறப்பட்டுவந்தது. அதாவது பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தன் சகோதரரும், நடிகருமான கிருஷ்ணாவும் ஸ்ரீகாந்த்துடன் சேர்ந்து கொக்கைன் பயன்படுத்தியதாக பிரதீப் கூறியதாக தெரிகிறது. எனவே அவருக்கு காவல் துறையினர் விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பினார்கள். ஆனால் கிருஷ்ணாவோ விசாரணைக்கு வரவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
விரைந்தது தனிப்படை: அதேசமயம் அவர் தலைமறைவெல்லாம் ஆகவில்லை கேரளாவில் ஷூட்டிங்கில் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. இந்நிலையில் தனிப்படை காவல் துறையினர் கிருஷ்ணாவை கைது செய்து அழைத்து வருவதற்காக கேரளாவுக்கு விரைந்திருக்கிறது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தும்போது இன்னும் யார் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்தது.
ஸ்ரீகாந்த் வாக்குமூலம்: இதற்கிடையே ஸ்ரீகாந்த் கொடுத்திருந்த வாக்குமூலத்தில், "என்னை வைத்து தீங்கிரை என்ற படத்தை பிரசாத் தயாரித்தார். அதில் பத்து லட்சம் ரூபாய் சம்பள பாக்கி இருக்கிறது. அந்த பாக்கி பணத்தை கேட்கும்போதெல்லாம் கொக்கைனை அவர் கொடுத்துவிடுவார். பிறகு நானே கேட்கும் நிலைக்கு ஆளானேன். நான் மட்டும்தான் கொக்கைன் பயன்படுத்தினேன் யாருக்கும் விற்பனை செய்யவில்லை' என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











