உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்.. நடிகர் சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு!
சென்னை: ஜெய் பீம் படத்திற்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நடிகர் சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பிட்ட சாதியின் சின்னம்
விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் வன்னியர் சமூகத்தின் சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தன. இதைத்தொடர்ந்து படத்தில் இருந்து அந்த சின்னம் நீக்கப்பட்டது.

ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்
இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

சூர்யாவுக்கு ஆதரவு
மேலும் நடிகர் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருவதாக பாமக செயலாளர் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வி ஸ்டேண்ட் வித் சூர்யா என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டானது. சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் "ஜெய் பீம்"திரைப்பட விமர்சனங்கள் தொடர்பாக உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சூர்யா வெளியே செல்லும்போது அவருக்கு துப்பாக்கி ஏந்திய இரு காவலர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நடிகர் சூர்யா தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











