இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்
திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகம் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படம் பிளெஸ்ஸி-பிருத்விராஜின் ஆடுஜீவிதம். இந்தப் படம் பென்யாமின் எழுதி 2009ஆம் ஆண்டு கேரள சாகித்திய அகாதெமி விருது வென்ற The Goat's Life நாவலின் தழுவல் ஆகும். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் பிருத்விராஜுடன் அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது.
மலையாளத்தில் 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் பிருத்விராஜ். முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டியதன் மூலம் மல்லுவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. வில்லன், கதாநாயகன் என மாறி மாறி பல ரோல்களை செய்தார். தமிழில் அவர் கே.வி.ஆனந்த் இயக்குநராக அறிமுகமான கனா கண்டேன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

மிரட்டும் வில்லன்: ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்க கோபிகா அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். வில்லன் என்றாலே தொண்டை கிழிய கத்தி வசனம் பேச வேண்டும் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து சாந்தமான முகத்தை வைத்துக்கொண்டு பக்குவமான குரலால் பேசி பார்வையால் மிரட்டி வில்லன் ரோலை செய்திருந்தார் பிருத்வி. இதனையடுத்து அவரது நடிப்பு தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது.
தமிழிலும் வாய்ப்புகள்: கனா கண்டேன் படத்தில் வில்லனாக நடித்தாலும் அவர் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்று உணர்ந்துகொண்ட மற்ற இயக்குநர்கள் அவரை தமிழில் கதாநாயகனாகவே புக் செய்தனர். அந்த வகையில் பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் ஹீரோவாக நடித்தார்.பிறகு ராதாமோகன் இயக்கத்தில் வெளியான மொழி படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.தொடர்ந்து சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவிய தலைவன், அபியும் நானும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
இயக்குநர்: நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலிப்பவர் பிருத்விராஜ். 2019ஆம் ஆண்டு மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய லூசிஃபர் படம், 2022ஆம் ஆண்டு மோகன்லாலை மீண்டும் இயக்கிய ப்ரோ டாடி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் படங்களாக அமைந்தன. அதிலும் ப்ரோ டாடி படம் மிகச்சிறந்த காமெடி படமாகவும் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரிஅப்படம் வெளியானது. அடுத்ததாக ஆடுஜீவிதம் படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பு: இந்தப் படமானது பென்யாமின் எழுதிய The Goat's Life என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. கேரளாவை சேர்ந்த நஜீப் என்ற இளைஞன் சவுதிக்கு வேலை சென்ற சூழலில் அங்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழில் கிடைக்க; அப்போது வாய்த்த அடிமை வாழ்க்கையிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்ற லைனை வைத்துக்கொண்டு சுவாரசியம் குறையாமல் நாவல் செல்லும். தற்போது அது படமாகியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நஜீப் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்திருக்கிறார். பிளெஸ்ஸி படத்தை இயக்கியிருக்கிறார்.
பிருத்விராஜ் பேட்டி: படமானது நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்தச் சூழலில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிருத்விராஜ் அளித்த பேட்டியில், "என்னுடைய அப்பா ஃபேமஸான நடிகராக இருந்தார். அதனால்தான் எனக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தது. இதை சொல்வதற்கு எனக்கு கூச்சம் இல்லை. ஏனெனில் அதுதான் உண்மை. முதல் பட வாய்ப்பு மட்டும்தான் எனக்கு எளிதாக கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த படங்களுக்கு நான் கடுமையாக உழைக்க வேண்டியதிருந்தது. அதேபோல் நான் என்ன செய்தாலும் என்னுடைய அப்பாவால்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதையும், நான் என்னுடைய அப்பாவுக்கு மகன் என்பதையும் மாற்ற முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











