அபிநய் மாதிரி அப்பாஸ் இல்லை.. செம ஸ்மார்ட்.. கௌரவமா இருக்காரு.. வித்தியாசம் இதுதான்.. தயாரிப்பாளர் ஓபன்
சென்னை: நடிகர் அபிநய்யின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குடியிருந்த வாடகை வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் இறந்து கிடந்தது பார்ப்போரை கலங்கடிக்க செய்தது. சமீபத்தில் நடந்த அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில்கூட, அனாதையாக யாரும் சாகக்கூடாது என்று கலக்கப்போவது யாரு பாலா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
துள்ளுவதோ இளமை என்ற ஒரு படத்தில் நடித்து கடைசிவரை அந்தப் படத்துடைய அடையாளத்தோடு வாழ்ந்தவர் அபிநய். அப்படம் அவருக்கு நல்ல என்ட்ரியை கொடுத்தாலும் அடுத்தடுத்து வந்த படங்கள் அவரை சினிமாவில் நிலைக்க வைக்கவில்லை. ஜஞ்ஷன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் தோல்வியை சந்தித்ததன் காரணமாக துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் பெரிதாக அவருக்கு க்ளிக் ஆகவில்லை.
டப்பிங் பேசிய அபிநய்: சினிமா மீது வெறி பிடித்த நபர் அதில் எந்த வேலையாக இருந்தாலும் தயங்காமல் செய்வார். அப்படித்தான் அபிநய். ஹீரோ, துணை கதாபாத்திரங்களுக்கான வாய்ப்பு குறைந்ததை அடுத்து உடனடியாக தனது ட்ராக்கை மாற்றிய அவர்; டப்பிங் பேச ஆரம்பித்தார். அப்படி அவர் பேசிய ஃபேமஸான படங்களில் ஒன்றுதான் துப்பாக்கி. அப்படத்தில் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு அவர் டப்பிங் பேசிய விதமாக பயங்கர ரிச்சாக இருந்தது.

உதவிய பாலா: இருந்தாலும் ஹீரோவாக வெல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. பற்றாக்குறைக்கு உடல்நல பிரச்னையும் வந்ததால் சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கிவிட்டார். உறவினர்களும் கைவிட்டதால் தனிமையும் அவரை சூடிக்கொண்டது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவரது புகைப்படம் ஒன்று வெளியானது. அதனை பார்த்துவிட்டு பதறியடித்து சென்ற கலக்கப்போவது யாரு பாலா நிதியுதவி செய்தார். அது அபிநய்க்கு கொஞ்சம் தெம்பு கொடுத்தது.
உயிரிழந்த அபிநய்: அவரைப் போன்றே இன்னும் சில நடிகர்கள் உதவி செய்தார்கள். எனவே எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என்று நம்பப்பட்டது. ஆனால் அருகில் யாருமே இல்லாத நிலையில் தான் குடியிருந்த வீட்டில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். அதனையடுத்து பாலா நேரில் சென்று இறுதிசடங்குகளுக்கான ஏற்பாட்டை செய்தார். இந்நிலையில் அபிநய்யை அப்பாஸுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
பாலாஜி பிரபு பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "அபிநய்யையும் அப்பாஸையும் ஒப்பிட்டு பார்க்கலாம். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து ஒருகட்டத்தில் இல்லாமல் போனபோது அபிநய் மன உளைச்சலுக்கு ஆளாகி குடிக்கு அடிமையாகி இப்போது உயிரிழந்தும்விட்டார். ஆனால் அப்பாஸ் என்ன செய்தார் தெரியுமா? ஸ்மார்ட்டாக முடிவு எடுத்தார். இனிமேல் இங்கு சர்வைவ் செய்ய முடியாது என்பதை தெரிந்துகொண்டு நியூசிலாந்துக்கு சென்று அங்கு சில வேலைகளை பார்த்தார்.
அவர் கௌரவமா இருக்காரு: அவர் என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை. ஆனால் கௌரவமாக தனது மகனை படிக்க வைத்துவிட்டார். டீசன்ட்டான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார். அபிநய்யைவிடவும் அப்பாஸ் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகர். பெண்கள் எல்லாம் கொண்டாடினார்கள். அவரே சினிமா இனிமேல் இல்லை என்று முடிவானதும் தீர்மானமாக முடிவெடுத்து வெளியே போய்விட்டார். வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











