இப்படி பண்ணிட்டாருங்க... நடிகர் அதர்வா மீது பரபரப்பு புகார்... தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து
சென்னை: தனது படத்தில் நடித்துக்கொடுக்காமல் இழுத்தடிப்பாதாக நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
நடிகர் அதர்வா சொந்த தயாரிப்பில் நடித்து வெளிவந்த திரைப்படம், செம போத ஆகாதே. இந்த படத்தின் உரிமையை தயாரிப்பாளர் மதியழகன் என்பவருக்கு ரூ.5.5 கோடிக்கு கொடுத்திருந்தாராம் அதர்வா. இந்தப் படம் படுதோல்வி அடைந்தது.

கடும் நஷ்டம்
இதனால் மதியழகனுக்கு கடும் நஷ்டம். அதை சரிகட்ட அதர்வா ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாகக் கேட்கப்பட்டது. சரி என்றாராம் அதர்வா. இதற்காக அவருக்கு ரூ.50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தார் மதியழகன்.

இழுத்தடிக்கிறார்
இந்நிலையில், தன்னிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, படம் நடித்துக் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் அவரால் தனது 6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசில் புகார் அளித்திருந்தார்.

பலமுறை அழைத்தும்
தயாரிப்பாளர் சங்கத்திலும் இதுபற்றி புகார் அளித்திருந்தார் மதியழகன். இதுபற்றி விசாரிக்க, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அதர்வாவுக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

பிரச்னையை முடிக்காமல்
இதனால், இந்தப் பிரச்னையை முடிக்காமல் அவர் நடித்துள்ள மற்றப்படங்களை வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தார்களாம். இதனால் பதறியடித்து, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் விசாரணைக்கு நடிகர் அதர்வா நேற்று சென்றார்.

விசாரணை
அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மதியழகனிடம், தான் ரூ.50 லட்சம் அட்வான்ஸ் வாங்கவில்லை என்றும் ரூ.20 லட்சம்தான் வாங்கினேன் என்றும் அதர்வா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் மதியழகன், சங்கத்துக்கு நேற்று வராததால், இந்த பிரச்னையை இன்னும் சில நாட்கள் கழித்து மீண்டும் பேச உள்ளனர்.


Click it and Unblock the Notifications











