அஜித்தை பற்றி இன்னமும் அப்படி பேசுகிறாரே தயாரிப்பாளர்.. ஓயவேமாட்டார் போல
சென்னை: அஜித் நடிப்பில் இப்போது விடாமுயற்சி படமும், குட் பேட் அக்லி திரைப்படமும் உருவாகிவருகிறது. சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படமானது பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. அதேபோல் குட் பேட் அக்லி திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் மீண்டும் அஜித்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
அஜித்தின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான துணிவு படம் சூப்பர் ஹிட்டடித்தது. முக்கியமாக போட்டியாக களமிறங்கிய வாரிசு திரைப்படத்தைவிடவும் துணிவு படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். ஆனால் விக்னேஷின் கதையில் சில பிரச்னைகள் இருந்ததாலும்; மாற்றங்களை செய்வதற்கு விக்னேஷ் மறுத்ததாலும் அந்தப் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

விடாமுயற்சி: மகிழ் திருமேனி அஜித்தை வைத்து இயக்கும் படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டது. இதில் அஜித்துடன் அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் ஒரு வருடத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. அஜர்பைஜானில் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்த சூழலில் திடீரென படம் ட்ராப்பாகிவிட்டது என்றெல்லாம் தகவல்கள் பரவின. ஆனால் அதெல்லாம் பொய் என்பதை உணர்த்தும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
டீசர் ரிலீஸ்: இருந்தாலும் படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை டீசர் பெற்றாலும்; படம் இன்னொரு சிக்கலில் சிக்கியிருக்கிறது. அதாவது, பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பிதான் விடாமுயற்சி என்றும்; அதற்காக பிரேக் டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 150 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி மும்முரமாக நடித்துவருகிறார். இதில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். ஹீரோயினாக திரிஷா நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஷூட்டிங்கின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. மேலும் தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துவருவதாகவும் ஒரு தகவல் கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மாணிக்கம் நாராயணன் பேட்டி: இந்நிலையில் தான் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் அஜித் குறித்து கடுமையாக பேசும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் எல்லோரையும் திட்டுகிறேன் என்பதால் முட்டாளாகிவிடமாட்டேன். அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அஜித்குமார் என்ன கிழித்துவிட்டார். அவர் என்னிடம் வாங்கிய பணத்தைத்தானே கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











