ஹீரோ .. ஹீரோ ..
திரைப்படத் தயாரிப்பு செலவுகளை குறைப்பதற்காக தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கைகள் பலவற்றை நடிகர், நடிகைகள் ஏற்றுக் கொண்ட பிறகும்,தயாரிப்பாளர்கள் புதிய படங்களை துவங்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், படத்தயாரிப்பு செலவை குறைப்பதற்கான வழிகளை காண தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகளுக்குஇடையே பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் நடிகர், நடிகைகள் அவர்களாகவே டிரைவர், உதவியாளர்கள், மேக்கப்மேன்கள், உடையலங்கார நிபுணர்களை வைத்துக் கொண்டால் அவர்களுக்குஅந்த நடிகர், நடிகைகளே சம்பளம், பேட்டா செலவுகளை கொடுக்க வேண்டும்.
சொந்தக் காரில் வருபவர்கள் பெட்ரோல் செலவு கேட்கக் கூடாது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்று இல்லாமல் மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கவேண்டும்.
ஒப்புக் கொண்ட படங்களை வரிசைப்படி முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இவைகள் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளோம். ஆனால், பலவித காரணங்களால் லேப் லெட்டர் முறையை மட்டும் நடிகர், நடிகைகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மற்றபடி தயாரிப்பாளர்கள் செலவுகளை எந்தளவிற்கு குறைக்க முடியுமோ அதற்கு ஏற்ப ஒத்துழைப்பு தரவும் சம்மதம் தெரிவித்துள்ளோம்.
தமிழ்ப்பட உலகில் கடந்த 75 ஆண்டு காலத்தில் இது வரையில் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த அளவிற்கு நடிகர், நடிகைகள் ஒத்துழைப்பு கொடுத்ததில்லை.
இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு ஒரு படத்திற்கு பல லட்ச ரூபாய் செலவு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
படத்திற்கு ஆகும் செலவுகளுக்கெல்லாம் நடிகர், நடிகைகள் தான் காரணம் என்பது போல் ஒரு மாயை ஏற்படுத்துவதை தயாரிப்பாளர்கள் தவிர்க்கவேண்டும்.
திரையுலகில் வேலை நிறுத்தம் என்ற பேச்சுக்கே நாங்கள் எந்த ஒரு சந்தர்பத்திலும் இடம் தரவில்லை. தயாரிப்பாளர்களின் முக்கியமானகோரிக்கைகளுக்கு நடிகர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதை அறிந்த தயாரிப்பாளர்கள் இதற்குப் பிறகும் புதிய படங்களை இன்னும் துவக்காமல் காலம்தாழ்த்தி வருவது வேதனையளிக்கிறது.
இனியும் தாமதிக்கிகாமல் புதிய படங்களை துவக்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











