பத்ம ஸ்ரீ விருது ஒன்னும் சும்மா கிடைச்சுடல.. இவங்கதான் இதுக்கு எல்லாம் காரணம்.. மாதவன் பளிச்!
சென்னை: இந்திய திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக நடிகர் ஆர். மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. இந்த உயரிய விருதை, ஒரு பெரிய பொறுப்பாக கருதுவதாக மாதவன் தெரிவித்துள்ளார். 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட 75 பத்ம விருது பட்டியலில் மாதவனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
திரையுலகில் ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து வரும் மாதவன், இந்த தேசிய அங்கீகாரம் தனக்கு மிகவும் தனிப்பட்ட உணர்வைத் தருவதாகக் கூறியுள்ளார். இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்ம ஸ்ரீ, தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் மாதவனின் நீண்டகாலச் சேவையையும், ரசிகர்களிடையே அவர் பெற்றுள்ள நிலையான செல்வாக்கையும் கவுரவிக்கிறது.
பொதுவாக தனிப்பட்ட விளம்பரத்தை விரும்பாத மாதவன், இத்தகைய தேசிய அங்கீகாரத்தை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என பகிர்ந்துள்ளார். தனது பயணத்திற்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், வழிகாட்டிகள் மற்றும் ரசிகர்களுக்கு அவர் வெளிப்படையாகவே நன்றி தெரிவித்துள்ளார்.

பத்ம விருதுகள் பட்டியல் வெளியான சில நிமிடங்களிலேயே, மாதவன் இன்ஸ்டாகிராமில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டார். அதில், இந்த விருதை தனக்கு நெருக்கமானவர்களுக்கும், வழிகாட்டிய குருமார்களுக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இந்திய சினிமாவுக்கான இந்த தருணத்திற்கு பலரின் பங்களிப்பு இருந்ததை அவர் நன்றியுடன் எடுத்துரைத்தார்.
மாதவன்: அவரது பதிவில், "இந்த பத்மஸ்ரீ விருதை ஆழ்ந்த நன்றியுடனும், பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். நான் கனவு கூட காணாத இந்த விருது, எனது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சொந்தமானது. அவர்களின் நிலையான ஆதரவும், நம்பிக்கையும்தான் எனது மிகப்பெரிய பலம். எனது வழிகாட்டிகளின் ஆசீர்வாதம், நலம் விரும்பிகளின் அன்பு, பொது மக்களின் ஆதரவு, எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாம் வல்ல இறைவனின் கருணையினால் தான் இந்த அங்கீகாரம் சாத்தியமாகியுள்ளது. எனது பயணத்தை வடிவமைத்து, இந்த தருணத்திற்கு கொண்டு வந்ததில் அவர்கள் ஒவ்வொருவரும் அளப்பரிய பங்காற்றியுள்ளனர்," என மாதவன் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பொறுப்பு: மேலும், "இதை ஒரு விருதாக மட்டுமல்ல, ஒரு பெரும் பொறுப்பாகவே கருதுகிறேன். இந்த விருதை கௌரவத்துடனும், நேர்மையுடனும், அது குறிக்கும் விழுமியங்களுக்கு ஆழ்ந்த அர்ப்பணிப்புடனும் எடுத்துச் செல்வேன் என்று உறுதியளிக்கிறேன். இந்த அசாதாரணமான அங்கீகாரத்திற்கும், உறுதிப்படுத்தலுக்கும் எனது மனம் நன்றியால் நிரம்பியுள்ளது. வரும் ஆண்டுகளில் நேர்மையுடனும், பணிவுடனும், அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து சேவை செய்ய நம்புகிறேன்," என மாதவன் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
திரை வாழ்க்கை: முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது திரைப் பயணத்தில், மாதவன் பல மொழி ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் ஆகியுள்ளார். மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' மூலம் தமிழ்த் திரையுலகில் பரவலாக அங்கீகாரத்தைப் பெற்ற இவர், 'ரெஹ்னா ஹே தேரே தில் மே' எனும் இந்தி காதல் நாடகம் வழியாக இந்தி ரசிகர்களையும் கவர்ந்தார். இந்தப் படங்கள் அவருக்கு ஒரு வலுவான பன்மொழி ரசிகர் பட்டாளத்தை உருவாக்க உதவின. மாதவனின் நடிப்பில் சமீபத்திய ரீலீஸான ஆதித்யா தர் இயக்கிய 'துரந்தர்' திரைப்படம், தற்போது நான்காவது அதிக வசூல் ஈட்டிய இந்தியப் படமாக உருவெடுத்துள்ளது. இதில் ஒரு இந்திய உளவுத்துறை தலைவராக நடித்த மாதவன், இதன் இரண்டாம் பாகத்திலும் அதே பாத்திரத்தில் நடிக்கிறார். இது 2026 மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











