எகிறும் பட்ஜெட்?.. எஸ்டிஆர் 48லிருந்து விலகிய ராஜ்கமல் நிறுவனம்?.. சிம்புவுக்கு புது சோதனை?
சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை எண்ணங்களை ஒருமுகப்படுத்தி சிறப்பாக நடித்துவருகிறார். முக்கியமாக சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாகத்தான் வருவார் என்று அவர் மீது பல வருடங்களாக வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு இந்த இன்னிங்ஸில் உடைபட்டிருக்கிறது. இப்போது அவர் தனது 48ஆவது படம், தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் எஸ்டிஆர் 48 குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. சிறு வயதிலிருந்தே நடித்துவரும் அவர் நடிப்பு, இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, இசையமைப்பது என பல ஜானர்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். அதேசமயம் சிம்பு ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு மட்டும் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டுக்கொண்டே வந்தது. அதன் காரணமாக சில பிரச்னைகளையும் அவர் சந்தித்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது. ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கவும் செய்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு உடல் எடை கூடியது; அவரது எண்ணமும் ஆன்மீகம் பக்கம் ஒதுங்கியது. முக்கியமாக இரண்டு காதல் தோல்விகளையும் சந்தித்தார். அதனால்தான் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கினார் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து உடல் எடையை குறைத்து, எண்ணங்களை ஒருமுகப்படுத்தி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். அதன்படி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை.
அடுத்தடுத்த ஹிட்: அதற்கு பிறகு நடித்த மாநாடு சூப்பர் ஹிட்டடித்தது. மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.
எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய தகவல்: இந்நிலையில் எஸ்டிஆர் 48 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்கான பட்ஜெட் நினைத்ததைவிடவும் அதிகமாக வாய்ப்பிருப்பதாக ராஜ்கமல் நிறுவனம் நினைப்பதால்; இதிலிருந்து வெளியேற அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே எஸ்டிஆர் 48 படத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்கும் முடிவில் இறங்கியிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











