மக்கள்ட்ட கொடுத்தா கடவுள்ட்ட சேரும்... தமிழ்ப் புத்தாண்டில் புதிய உதவிகளை அறிவிக்கிறார் லாரன்ஸ்!
சென்னை: தமிழ்ப் புத்தாண்டில் புதிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் ராகவா லாரன்ஸ், சில தினங்களுக்கு முன்பு 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.
அதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையில் கொரோனா நிவாரண நிதிக்காக, 3 கோடி ரூபாய் கொடுக்கவுள்ளதாக அறிவித்தார்.

நிவாரண நிதி
அந்த 3 கோடி ரூபாயில் யாருக்கு எவ்வளவு என்ன விவரத்தையும் வெளியிட்டு இருந்தார். ரூ. 50 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் ரூபாயை ஃபெப்சிக்கும் ரூ. 50 லட்சத்தை டான்ஸ் சங்கத்திற்கும், ரூ. 75 லட்சத்தை தொழிலாளர்களுக்கும் அளித்தார். ரூ. 25 லட்சத்தை மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு கொடுத்துள்ளார்.

அழைப்புகள் வந்தன
லாரன்ஸின் இந்த தாராள மனதுக்கு சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டுத் தெரிவித்தார்கள். இதனிடையே, தற்போது தனது ஃபேஸ்புக்கில் புதிய பதிவொன்றை நேற்று லாரன்ஸ் வெளியிட்டார். அதில், நிவாரண நிதி அளித்ததற்காக என்னை வாழ்த்திய சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், நன்றி. இந்த நிதியை வழங்கிய பின் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலரிடம் இருந்து அழைப்புகள் வந்தன.

தூங்க முடியலை
இந்த உதவியை விரிவுபடுத்துமாறு கோரிக்கை வைக்கின்றனர். இவை அனைத்துக்கும் நான் கொடுத்த 3 கோடி ரூபாய் போதுமானதாக இருக்காது. இதனால் என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. மக்கள் அழும் வீடியோ என்னை தொந்தரவு செய்தன. கஷ்டப்படும் மக்களின்
பசியில்தான் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன்.

முக்கியமான காலகட்டம்
கடவுளிடம் கொடுத்தால் அது மக்களிடம் சேராது. மக்களுக்கு கொடுத்தால் அது கடவுளிடம் சேரும் என்று நினைக்கிறேன். கடவுள்தான் என்னை சேவை செய்ய அனுப்பி இருப்பதாகவும் நினைக்கிறேன். இது, எல்லோருக்கும் முக்கியமான காலகட்டம். இதுதான் சேவை செய்வதற்கான சரியான நேரம். எனவே மக்களுக்கும் அரசுக்கும் சிறப்பான சேவை செய்ய முடிவு செய்துள்ளேன்.

தமிழ்ப் புத்தாண்டு
அதுபற்றி என் ஆடிட்டர் மற்றும் நலம் விரும்பிகளிடம் ஆலோசித்து இன்று மாலை அறிவிக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், அறிவிக்கவில்லை. இதையடுத்து வேறொரு பதிவை அவர் இட்டுள்ளார். அதில், இந்த ஐடியா குறித்து எனது ஆடிட்டரிடம் ஆலோசித்தேன். அவர் இன்னும் இரண்டு நாட்கள் நேரம் வேண்டும் என்று கேட்டார். அதனால், வரும் 14 ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











