twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரசிகர்களை சந்தித்த ரஜினி!

    By Staff
    |

    கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    முன்னதாக நேற்று இமயமலைக்குச் செல்வதாக இருந்தார் ரஜினி. ஆனால் திடீரென அந்தப் பயணத்தை ஒத்தி வைத்து விட்டார்.

    ரஜினிகாந்த முன்பெல்லாம் தனது வீட்டைத் தேடி வரும் ரசிகர்களை சந்தித்துப் பேசுவார். அவர்களுடன் நின்று புகைப்படத்திற்கும் போஸ் கொடுப்பார்.

    ஆனால் கடந்த பத்து ஆண்டுளாக அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை. அரசியல், திரையுலக நெருக்கடியான சூழல்களிலும் கூட அவர் நேரடியாக ரசிகர்களை சந்திக்கவில்லை. தனது வாய்ஸ் மூலமாகவும், அறிக்கைகள் மூலமாகவும்தான் ரசிகர்களோடு உறவாடி வந்தார் ரஜினி.

    இந்த நிலையில், இன்று காலை திடீரென சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்தார். காலை 8 மணிக்கே தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ரசிகர்கள், மன்ற பொறுப்பாளர்கள் மண்டபத்தில் திரண்டிருந்தனர். அங்கு ரசிகர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

    பின்னர் 11 மணிக்கு மேல் ரஜினி வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை சகிதமாக வந்திறங்கினார். தலைவரை நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரில் பார்த்ததும் குஷியாகிப் போன ரசிகர்கள் தங்களு பாணியில் உரத்த குரலில் வாழ்த்துக் கோஷங்களைப் போட்டு ரஜினியையும் சந்தோஷப்படுத்தி விட்டனர்.

    பின்னர் ரசிகர்களை அழைத்துப் பேசினார் ரஜினி. அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பலர் அவர் காலில் விழ வந்தபோது அவர்களை தடுத்து கை குலுக்கினார்.

    ரசிகர்கள் சிலர் ரஜினி உருவம் பொறித்த மோதிரம் கொண்டு வந்து அதை அவர் கையால் தங்கள் விரலில் போடச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் ரசிகர்களுடன் ஜாலியாக கழித்த ரஜினி 12 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    ரஜினியின் இந்த திடீர் சந்திப்பு குறித்து அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்திய நாராயணனிடம் கேட்டபோது, அவர் ரசிகர்களை சந்தித்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. 1994ல் அருணாச்சலம் ரீலிஸ் ஆன போது ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர் சந்திக்கவில்லை.

    சமீப காலமாக தலைவரை சந்திக்க வேண்டும் என ரசிகர்கள் கோரி வந்தனர். அதை ஏற்று இப்போது அவர்களை சந்தித்தார் என்றார்.

    சிவாஜி படம் ரிலீஸ் ஆகும் இந்த நேரத்தில் ரஜினி ரசிகர்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரசிகர்களை சந்திக்காமல் இருந்து வந்த ரஜினி, சந்திரமுகிக்கு ரசிகர்கள் கொடுத்த பேராதரவால் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

    தான் ரசிகர்களிடமிருந்து விலகிப் போனாலும் அவர்கள் விடுவதாக இல்லை என்பதை உணர்ந்ததால்தான் இந்த முறை திடீரென ரசிகர்களை சந்திக்க ரஜினி முடிவு செய்ததாக தெரிகிறது.

    மேலும், சிவாஜி படத்துக்குப் பிறகு ரஜினி சில முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் பேச்சு நிலவுகிறது. எனவேதான் ரசிகர்களை சந்தித்து அச்சராம் போட்டு வைத்துள்ளார்.

    முன்னதாக நேற்று இமயமலைக்குச் செல்வதாக இருந்தார் ரஜினி. ஆனால் திடீரென அந்தப் பயணத்தை ஒத்தி வைத்து விட்டார். ரசிகர்களின் சந்திப்பு இதற்கு ஒரு காரணம். இன்னொரு காரணம், அவரது மனைவி லதா நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளியின் 15வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவும் தனது இமயமலைப் பயணத்தை ஒத்தி வைத்தாராம் ரஜினி.

    நில தானம்:இதற்கிடையே, தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நில தானம் செய்துள்ளாராம் ரஜினிகாந்த்.

    ரஜினிக்கு கேளம்பாக்கம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை இல்லத்துக்கு அருகே நிலமும் வைத்துள்ளார்.

    தற்போது இந்த நிலத்திலிருந்து தனது ஊழியர்களுக்கு ஆளுக்கு ஒன்றரை கிரவுண்டு நிலத்தை இலவசமாக கொடுத்துள்ளாராம் ரஜினி. தனக்காக பாடுபட்டு வரும் அவர்களது உழைப்பையும், விசுவாசத்தையும் கெளரவிக்கும் வகையில், இந்த அன்பளிப்பை செய்துள்ளாராம்.

    மொத்தம் 25 கிரவுண்டு நிலத்தை இப்படி தானமாக வழங்கியுள்ளார். இன்றைய ரேட்டுக்கு இவை பல கோடிகளைத் தொடும். இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதில் புதிதாக ஒன்றும் இல்லை சார். ஆண்டுதோறும் இதை ரஜினி சார் செய்து வருகிறார்.

    தனது ஊழியர்களை மதிப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர் தலைவர். அவர்களுக்கு நல்ல சம்பளம், குடும்பம் நடத்த போதுமான உதவிகளை வாரி வழங்கி வருகிறார். யாரும் சம்பளம் போதவில்லை என்று இதுவரை புலம்பியதில்லை. அந்த அளவுக்கு அனைவரையும் வசதியாக வைத்துள்ளார்.

    நல்ல சம்பளம், குடியிருக்க வீடு, கல்வி ஆகிய மூன்று விஷயங்களிலும் அவர் ஊழியர்களைத் திருப்திப்படுத்தியுள்ளார் என்று கூறப்பட்டது.

    எம்.ஜி.ஆர்.தான் இப்படி தான தர்மங்களில் வல்லவராக விளங்கினார். அந்த வழியில் இப்போது ரஜினியும் நடைபோடுகிறார்.

    ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல சூப்பர் மேனும் கூட!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X