நடிகர் சங்கத்தின் கவுரவ தலைவராகிறார் ரஜினிகாந்த்?
சென்னை: நடிகர் சங்கத்தின் கவுரவ தலைவராக ரஜினிகாந்தை நியமிக்க புதிய நிர்வாகக் குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த தேர்தலில் விஷால் அணி வெற்றிபெற்றுள்ளது. தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஷால் அணியை சேர்ந்த கார்த்தி பொருளாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த ராஜேஷ், ஜூனியர் பாலையா, குட்டி பத்மினி, கோவை சரளா, பிரசன்னா, நந்தா, ரமணா, ஸ்ரீமன், பசுபதி, உதயா, பூச்சிமுருகன், சங்கீதா, சோனியா உள்பட 20 பேர் தேர்வாகியுள்ளார்கள்.
விரைவில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட உள்ள நிலையில், நடிகர் சங்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்க புதிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பு இருவரிடமும் விஷால் அணி பல மணிநேரம் ஆலோசனைப் பெற்று தேர்தலைச் சந்தித்தனர். அப்போது கமல் நேரடியாக ஆதரவு வழங்கினார் விஷால் அணிக்கு. ஆனால் ரஜினி இரு தரப்புக்கும் பொதுவான நிலைப்பாட்டை எடுத்தார். இருவரில் யார் வெற்றிப் பெற்றாலும் வாழ்த்துகள் என்று கூறிவிட்டார்.
இப்போது புதிய நிர்வாகிகள், ரஜினிகாந்தை நடிகர் சங்கத்தின் கவுரவ தலைவராகவும், கமல்ஹாசனை கவுரவ ஆலோசகராகவும் நியமிக்கலாமா என ஆலோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











