முதலில் காலா இப்போ 2.0: பட ரிலீஸுக்கு முன்பு வாய்விட்டு சர்ச்சையில் சிக்கும் ரஜினி
Recommended Video

சென்னை: தன்னுடைய பட ரிலீஸுக்கு முன்பு நாட்டு நடப்பு பற்றி ஏதாவது கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் ரஜினிகாந்த்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள அந்த 7 பேர் யார் என்று நேற்று கேட்டார் ரஜினி.
இன்றோ பிளேட்டை மாற்றிப் போட்டு அந்த 7 பேரை தெரியாமல் இருக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று கூறியுள்ளார்.

பாஜக
அந்த 7 பேர் யார் என்று ரஜினி கேட்டவுடன் அவரை கலாய்த்து பலரும் ட்வீட்டினார்கள். இதனால் #ரஜினிக்கு_தெரியாது என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஒரு இடத்தை பிடிக்க பாஜக போராடி வரும் நிலையில் ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார்.

மோடி
மெகா கூட்டணி பற்றிய கேள்விக்கு, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்து சென்றால் யார் பலசாலி? 10 பேரா அந்த ஒருவரா என கேள்வி எழுப்பினார் ரஜினிகாந்த். இதன் மூலம் ரஜினி தான் பாஜக ஆதரவாளர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். ரஜினி அரசியலுக்கு வருவதே பாஜகவின் தூண்டுதலில் தான் என்ற பேச்சு உள்ள நிலையில் அவர் இப்படி பேட்டி கொடுத்துள்ளார்.

சர்ச்சை
தனது படங்கள் ரிலீஸாக சில நாட்கள் இருக்கும்போது பேட்டி கொடுத்து சர்ச்சையை கிளப்பிவிடுகிறார் ரஜினி. முன்னதாக காலா பட ரிலீஸுக்கு முன்பு காவிரி நீர் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு கொடுக்க வேண்டும் என்றார். அவரின் இந்த கருத்தால் கர்நாடகாவில் காலா படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கன்னடத்தில் பேசி அம்மாநில மக்களை சமாதானம் செய்தார்.

ஸ்டெர்லைட்
காலா பட ரிலீஸிக்கு முன்பு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடி காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரஜினி. பின்னர் விமான நிலையத்தில் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளை பார்த்து கோபம் அடைந்தார். தியானம், யோகா செய்யும் ரஜினிக்கு இப்படி கோபம் வருகிறதே என்ற விமர்சனம் எழுந்தது.

மக்கள்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் விஷக்கிருமிகள் மற்றும் சமூக விரோதிகள் நுழைந்ததால் வன்முறை வெடித்ததாக ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்று அவர் கூறினார். அவரின் இந்த பேச்சுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











