கோச்சடையான் விவகாரம்... ஒதுங்கி நிற்கும் ரஜினி... திட்டமிட்டபடி படம் வருமா?
கோச்சடையான் படம் அறிவித்தபடி மே 9-ம் தேதி வெளிவருமா... இல்லையா என்ற கேள்வி முன்னிலும் சத்தமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
காரணம்... படத்தின் விளம்பரங்கள் கடந்த மூன்று தினங்களாக நிறுத்தப்பட்டுவிட்டன.
தயாரிப்பாளர் முரளி மனோகர் ஏற்கெனவே தரவேண்டிய ரூ 38 கோடியை எடுத்து வைத்தால்தான் ஆச்சு என முன்னிலும் உறுதியாக நிற்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

முரளி மனோகர் ஒன்றும் பணத்துக்கு பஞ்சமுள்ள நபர் அல்ல. அவருடைய நிறுவனம் சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள பொது நிறுவனம் ஆகும். தமிழகமெங்கும் 12க்கும் அதிகமான திரையரங்குகளை சொந்தமாகவும் லீஸ் அடிப்படையிலும் நடத்திக் கொண்டிருக்கிறார். ஈராஸ் நிறுவனம் சார்பாகத்தான் கோச்சடையானையும் தயாரித்துள்ளார்.
இப்போது பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பணத்தில் ஒரு பைசா கூட இப்போது தராவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் ரஜினியை ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுங்கள் போதும் என்றும் விநியோகஸ்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த விநியோகஸ்தர்களிடம் பாபா, குசேலனில் ரஜினி நிறைய சங்கடங்களை அனுபவித்துவிட்டார்.
எனவே கோச்சடையான் படம் பிஸினஸைத் தொடங்கிய அடுத்த கணமே, ரஜினி கறாராகச் சொன்னது, 'படத்தின் பைனான்ஸ் பிரச்சினை, ரிலீஸ், விநியோகஸ்தர்களிடம் விலை பேசுவது என எதிலும் நான் தலையிட மாட்டேன்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஜஸ்ட் நான் ஒரு நடிகன். அவ்ளோதான்..." என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இப்போதுதான் என்றில்லை, ஒவ்வொரு படத்தை ஆரம்பிக்கும்போதும், இதையும் அக்ரிமெண்டில் சேர்த்துக்கங்க என்று கூறுவது ரஜினியின் வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது முரளி மனோகருக்கு ஒரு ஒரே வாய்ப்பு... பணத்தை செட்டில் செய்துவிட்டு படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்வதுதான். அதே நேரம் மே 9-ம் தேதி படத்தை வெளியிட வேண்டுமானால் நாளைக்குள் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
என்ன செய்யப் போகிறார்கள்?


Click it and Unblock the Notifications











