சுயசரிதை எழுத ஆரம்பித்துவிட்ட ரஜினி.. சென்சேஷனல் உறுதி.. எத்தனை தலை உருளப்போகுதோ?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கூலி திரைப்படம் தோல்வியடைய; அந்தத் தோல்வியை சரிக்கட்டியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதனை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 173 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதை நூலை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார், தலைவர் என இந்திய அளவில் கொண்டாடப்படுபவர் ரஜினி. நின்றால், நடந்தால், பார்த்தால், பேசினால் என அத்தனையிலும் ஸ்டைலை கொண்டிருக்கும் அவர் கடந்த 50 வருடங்களாக கோலிவுட்டின் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். அதற்கு காரணம் அவரது அயராத உழைப்பும், நேர்மையும்தான். இப்போது அவருக்கு 75 வயது ஆகிறது. இந்த வயதில் பெரும்பாலானவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பார்கள் இல்லை தாங்கள் சம்பாதித்த பணத்தை ஜாலியாக செலவு செய்து ஊர் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
ஷூட்டிங் செல்லும் ரஜினி: ஆனால் இவரோ ஊர் ஊராக ஷூட்டிங்குக்கு சென்று கொண்டிருக்கிறார். ஏனெனில் நடிப்பு தொழிலை தனக்கு கிடைத்த வரமாக பார்க்கிறார். அதனால்தான் கோவாவில் நடந்த விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டபோது பேசுகையில், 'அடுத்த ஜென்மத்திலும் ரஜினிகாந்த்தாக ஒரு நடிகனாக பிறக்கவே விரும்புகிறேன்' என கூறியிருந்தார். அந்த அளவுக்கு நடிப்பை அவர் மூச்சாக நேசித்துக்கொண்டிருக்கிறார் என்பது அந்தப் பேச்சின் ஊடாக அனைவருக்குமே புரிந்தது.

ஏகப்பட்ட அனுபவங்கள்: ரஜினியின் திரை வாழ்க்கையில் ஏகப்பட்ட அனுபவங்களை சந்தித்திருக்கிறார். வெற்றிகள், தோல்விகள் என மாறி மாறி அவருக்கு வந்திருக்கின்றன. முக்கியமாக ஒரு படத்தை தோல்வி படமாக கொடுத்துவிட்டால் இனி ரஜினி அவ்வளவுதான் என அவரை விரும்பாதவர்கள் சொல்வார்கள். அந்தப் பேச்சை கேட்டெல்லாம் அப்செட் ஆகாமல்; அடுத்த படத்திலேயே தரமான கம்பேக்கை கொடுத்து அப்படி பேசியவர்களின் வாயை அடைக்க செய்துவிடுவார். இதைத்தான் அவர் கடந்த பல வருடங்களாக செய்துவருகிறார்.
ரஜினி சொன்னது: இதற்கிடையே இத்தனை வருட திரையுலக அனுபவத்தில் அவர் சுயசரிதை நூழை எழுத வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துவந்தார்கள். அவரது குருநாதர் கே.பாலசந்தர்கூட ஒரு பேட்டியின்போது, 'நீ சுயசரிதை எழுதுவாயா?' என கேட்டதற்கு; 'இல்லை நான் எழுத மாட்டேன். சுயசரிதையில் உண்மைகளை மட்டும்தான் எழுத வேண்டும்' என பதிலளித்திருந்தார். எனவே சூப்பர் ஸ்டார் சுயசரிதை எழுதமாட்டார் என்றே ரசிகர்கள் கருதி வந்தார்கள்.
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்: ஆனால் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா சமீபத்திய ஒரு பேட்டியின்போது தலைவர் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "அப்பாவின் 50ஆவது ஆண்டு கொண்டாட்டத்துக்காகத்தான் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்தோம். ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் அதை ஒரு விழாவாக ஏன் கொண்டாடவில்லை என்று கேட்டல் அதை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. இன்னொரு விஷயம் அப்பா இப்போது அவருடைய சுயசரிதையை எழுதும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவரது வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக உலக அளவில் சென்சேஷனல் ஆகும்" என்றார்.
எத்தனை தலை உருளுமோ: ரஜினிக்கு திரைத்துறையில் நீண்ட அனுபவம் உண்டு. எத்தனையோ பேருடன் பணியாற்றியிருக்கிறார். எனவே சுய சரிதையில் அவற்றை பற்றியெல்லாம் எழுதும்போது பலரின் அறியாத பக்கங்கள் தெரியவரும் என்பதால் எத்தனை பேரின் தலை உருளப்போகுதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











