ரஜினிகாந்த் பிறந்தநாள்.. ஊருக்கே திருவிழா.. தலைவர் எங்கே எப்படி கொண்டாடிருக்காரு பாருங்க
சென்னை: ரஜினிகாந்த் இன்று தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு பிரதமர், முதலமைச்சர், நடிகர்கள், நடிகைகள், ரசிகைகள் என அனைவருமே தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். படையப்பா படமும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகிறது. ஊரே அவரது பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாடும் சூழலில் ரஜினி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வெளியாகியிருக்கிறது.
பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடலில் வைரமுத்து ஒரு வரி எழுதியிருப்பார். 'இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா' என்பதுதான் அது. அந்த வரி ரஜினிகாந்த்துக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். 50 வருடங்களாக திரைத்துறையில் கோலோச்சியிருக்கும் அவர் தன்னுடைய தலைமுறை, அடுத்த தலைமுறை, அதற்கு அடுத்த தலைமுறை, அதற்கும் அடுத்த தலைமுறை என பல தலைமுறைகள் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.
இந்த வயதிலும் பிஸி: இத்தனை வருடங்களில் ரஜினிகாந்த் ஓய்வு எடுத்தாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 30 நெருங்கினாலே முதல் மூப்பின் மனநிலைமை பலருக்கும் இப்போது வந்துவிடுகிறது. ஆனால் ரஜினியோ 75 வயதிலும் இளைஞர்களுக்கு போட்டியாக உழைத்துக்கொண்டிருக்கிறார். இந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் படுதோல்விதான். கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டதுதான். ஆனால் அதை தனது மனதுக்குள் ஏற்றிக்கொள்ளாமல் அடுத்த பட வேலையில் பிஸியாகிவிட்டார்.

கற்றுக்கொள்ள வேண்டியது: நாம் செய்யும் ஒரு விஷயம் தோல்வியடைந்தால் அதிலேயே முடங்கிவிடாமல் அடுத்தடுத்த விஷயத்தில் இன்னும் தீவிரமாக உழைத்து முன்னர் சந்தித்த தோல்வியை மறக்க வேண்டும் என்பதை ரஜினி இத்தனை வருடங்களாக அனைவருக்குமே சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அதன் காரணமாகத்தான் அவர் நடிகர் என்பதை தாண்டிய உறவிலும், உணர்விலும் தமிழ்நாட்டு ரசிகர்களின் நெஞ்சங்களில் இருக்கிறார் என்பதுதான் உண்மை.
இன்று 75ஆவது பிறந்தநாள்: இன்று அவர் தனது 75ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், முன்னாள் மருமகன் தனுஷ், பாடலாசிரியர் வைரமுத்து என பல விஐபிக்களும், விவிஐப்பிக்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள். அவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையும் திரண்டு வாழ்த்து சொல்லிவருகிறது.
ரஜினியின் கொண்டாட்டம்: திரைத்துறையினர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள் இன்றைய நாளை திருவிழா போல் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த்தோ தன்னுடைய பிறந்தநாள் அன்றும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இருக்கிறார். அங்கு அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு படக்குழுவினர் ஏற்பாடு செய்தார்கள். அதன்படி ரஜினிகாந்த் ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கேக் வெட்டி கொண்டாடினார். அவருடன் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோரும் இருந்தார்கள். அருகில் இருந்தவர்களுக்கு மகிழ்ச்சியோடு கேக்கையும் ஊட்டிவிட்டார் சூப்பர் ஸ்டார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











