தலைவர் 173 எப்படி இருக்கும்?.. பொங்கல் அதுவுமா சூப்பர் அப்டேட் சொன்ன ரஜினிகாந்த்.. சம்பவம் உறுதி
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவர் 173 படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கவிருக்கிறார். சமீபத்தில்தான் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. முதன்முறையாக சிபியும், ரஜினியும் சேர்வதால் கண்டிப்பாக இது புதுமையான படமாக இருக்கும் என பலரும் சொல்கிறார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி தலைவர் 173 படம் பற்றி பேசியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி மோசமான ட்ரோல்களையும் சந்தித்தது. இயக்குநரை ஊறப்போட்டு அடிக்கும் அளவுக்கு ரசிகர்கள் கடுப்பாகினார்கள். எனவே கமலுக்கு மாதிரி தனக்கும் மெகா ப்ளாக் பஸ்டரை லோகி கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரஜினிக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்தது. ரஜினி மட்டுமின்றி அதில் களமிறக்கப்பட்டிருந்த அத்தனை ஸ்டார்களையும் வேஸ்ட்டாக்கிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
தலைவர் 173: கூலியை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் கமிட்டாகியிருக்கும் ரஜினி இப்போது அதன் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார்.முதல் பாகம் போன்றே இரண்டாவது பாகத்தையும் தரமாக கொடுத்துவிட வேண்டும் என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது டீமுடன் மும்முரமாக இறங்கி வேலை செய்துவருகிறார். இதனை முடித்துவிட்டு ரஜினியும், கமலும் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்றுவார்கள் எனவும்; இரண்டு பேரும் நடிக்கும் படமாக அது இருக்கும் என்றுதான் கருதப்பட்டது.

வெளியேறிய சுந்தர்.சி: ஆனால் கமல் தயாரிக்க ரஜினி மட்டும் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இயக்குநராக சுந்தர்.சி ஃபிக்ஸ் செய்யப்பட்டார். ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாகத்தான் சுந்தரை இயக்குநராக போட்டிருக்கிறார்கள் என சொன்னார்கள். அந்த அறிவிப்பு சில நாட்களிலேயே இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர். இது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சிபி சக்கரவர்த்தி இயக்குநர்: சுந்தர். சி வெளியேறிய பிறகு பலரது பெயர்கள் இயக்குநர்கள் லிஸ்ட்டில் அடிபட்டது. இறுதியாக டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்குவது உறுதியாகிவிட்டது. இந்தக் கதையை சில வருடங்களுக்கு முன்பே ரஜினியிடம் சொல்லிவிட்டதாகவும்; இப்போது டெவலப் செய்த கதையை கேட்டுவிட்டு டபுள் மகிழ்ச்சியோடு ஓகே சொல்லிவிட்டார் என்றும் திரைத்துறை பட்சிகள் சொல்கின்றன.
பொங்கல் வாழ்த்து: இந்நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் கூடினார்கள். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். குறிப்பாக இந்தப் பொங்கல் விவசாயிகளுக்கான பொங்கல். அவர்கள்தான் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் சந்தோஷமாக இருந்தால்தான் மற்றவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும். இயக்குநர் சிபி சக்கரவர்த்தியோடு நான் சேர்ந்திருக்கும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். அது அனைவருக்கும் பிடிக்கும்வகையிலான கமர்ஷியல் படமாக இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











