கமல் அறிவாளி..வேள்பாரி விழாவுக்கு அவரை அழைத்திருக்கலாம்.. என்னை ஏன்?.. ரஜினிக்கு ஈகோவே இல்லை
சென்னை: மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை எழுதினார். சரித்திர நாவலான அது ஒரு லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றன். எனவே அந்த நாவலை வெளியிட்ட தனியார் ஊடகம் ஒன்று வெற்றி பெருவிழாவை நடத்தியது. அதில் ரஜினிகாந்த், ஷங்கர், உதயசந்திரன் ஐஏஎஸ், ரோகிணி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அதில் ரஜினி பேசியது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் இலக்கியத்தில் எத்தனையோ சரித்திர நாவல்கள் வந்திருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவைகள் மக்கள் மனதை கவர்ந்தவைதான். அந்த சரித்திர நாயகர்கள் பற்றிய வர்ணைனைகளும், அவர்கள் செய்த வீர சாகசங்கள் குறித்தும் நாவலில் எழுத்தாளர்கள் விவரிக்கும் விதமே அலாதியாக இருக்கும். அப்படிப்பட்ட சரித்திர நாவல்களில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது வீரயுக நாயகன் வேள்பாரி.
வெங்கடேசனின் படைப்பு: இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் மற்றும் எம்.பி சு.வெங்கடேசன் எழுதியிருக்கிறார். இதில், கபிலர் வாயிலாக பாரி மன்னரின் வாழ்வியலை தனது புனைவையும் கலந்து இவர் எழுதிய விதம், கதையை நகர்த்தியது, கேரக்டர்கள், சாகசங்கள், சரித்திர உண்மைகள் என அத்தனையும் இந்நாவலை மக்களிடம் கொண்டு சேர்த்தன. பலரும் இந்த நாவலுக்கு ரசிகர்களாக இருக்கிரார்கள்.
படமாகும் வேள்பாரி: வேள்பாரியை படித்த இயக்குநர் ஷங்கர் அதற்கான உரிமத்தை பெற்று அடுத்து அந்த நாவலை படமாக எடுக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் மீது இப்போதே எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கின்றன. இப்படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற கேள்விகள் எழ தொடங்கி; பல கணிப்புகளும் தொடர்ந்து வெளிவர தொடங்கிவிட்டன.

அதுமட்டுமின்றி வேள்பாரியை ஷங்கர் சொதப்பிவிடக்கூடாது என்றும் நாவலின் ரசிகர்க்ள் கோரிக்கையும் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வெங்கடேசன் ஏற்கனவே காவல் கோட்டம் நாவலை எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். காவல் கோட்டத்தை அடிப்படையாக வைத்துதான் வசந்தபாலன் அரவான் படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி விழாவில் ரஜினி: சூழல் இப்படி இருக்க வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை, நாவலை பிரசுரித்த தனியார் ஊடகம் வெற்றி பெரு விழா கொண்டாடியது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். அந்த விழாவில் பேசிய ரஜினி, " இந்த விழாவுக்கு சிவகுமாரை அழைத்திருக்கலாம். இந்த வயதில் 6 மணி நேரம்வரை மகாபாரதத்தை பற்றி பேசுகிறார்.
கமல் அறிவாளி: அப்படி இல்லையா கமல்ஹாசனை அழைத்திருக்கலாம். அவர் எவ்வளவு படித்திருக்கிறார்; எவ்வளவு பெரிய அறிவாளி. ஆனால் 75 வயதில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு ஸ்லோ மோஷனில் நடந்துவரும் என்னை அழைத்திருக்கிறார்களே என்றுதான் நினைக்கப்போகிறார்கள். ஒருமுறை, சு.வெங்கடேசன் என்னை அழைத்து வேள்பாரி ஒரு லட்சம் பிரதி விற்றிருக்கிறது. அதற்கான விழாவுக்கு நீங்கள் வந்தால் மகிழ்ச்சி; உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை உங்கள் விருப்பம் என்று வெங்கடேசன் கூறினார்.
வருவதாக ஒத்துக்கொண்டேன்: நானோ, 'வேள்பாரியை படிக்கவில்லையே' என்று கூறினேன். அதற்கு வெங்கடேசன், ஒருவரை அனுப்புகிறேன் உங்களுக்கு கதை சொல்வார் என்று சொன்னர். நான் அதெல்லாம் வேண்டாம் வருகிறேன் என்று ஒத்துக்கொண்டேன். பிறகு கொஞ்சம் படித்தேன்" என்றார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. மேலும் ரஜினிக்கு ஈகோவே இல்லையே எனவும் பாராட்டிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











