மீண்டும் உடல்நிலை பாதிப்பு-மீண்டும் மருத்துவமனையில் ரஜினி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினி நடிக்கும் ராணா' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்துக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, உடனே இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு அஜீரணக் கோளாறு தான் ஏற்பட்டதாக அவரது வீட்டில் தெரிவித்தனர்.
ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டு, இதனால் வாந்தி எடுத்தார் என்று கூறினர். சிகிச்சை முடிந்து அன்றைய தினம் மாலையில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
இந் நிலையில், ரஜினிகாந்துக்கு நேற்றிரவு 8.30 மணி அளவில் மீண்டும் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளதாகவும், லேசான காய்ச்சல் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது வீட்டினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











