படையப்பாவில் ரஜினி செய்த விஷயம்.. முதலில் சிரித்த படக்குழு.. ஆனால் அதுதான் செம மாஸ்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான படையப்பா கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது. மெகா ப்ளாக் பஸ்டர் ஆன அந்தப் படத்துக்கு ரஜினிதான் தயாரிப்பாளர். சிவாஜி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்திருந்த அப்படம் இன்றுவரை ரஜினி ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட். சூழல் இப்படி இருக்க 25 ஆண்டுகள் கழித்து ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி ரீ ரிலீஸாகவிருக்கிறது.
ரஜினிகாந்த்தின் கரியரில் படையப்பா படத்துக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. ஒவ்வொரு சீனிலும் ரஜினியின் மாஸ், ஸ்டைல், சூப்பர் நடிப்பு வெளிப்பட்ட படம்தான் அது. இந்தப் படத்தின் மூல கதையை ரஜினி உருவாக்கினாலும்; இதற்கான திரைக்கதையை கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கி படத்தை இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரஜினியுடன் சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், வடிவுக்கரசி, செந்தில், ரமேஷ் கண்ணா, அப்பாஸ் என பலர் நடித்திருந்தார்கள்.
மெகா ப்ளாக் பஸ்டர்: கடந்த 1999ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்களுக்கு திருவிழா போல் அமைந்தது. நீலாம்பரியுடனான மோதல், ரஜினியின் ஸ்டைல், சிவாஜியின் நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான இசை என படத்துக்கு தேவையான அனைத்தும் கூடி வந்ததால்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அந்தப் படத்தை டிவியில் போட்டால் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

இரண்டு இடைவேளைகள்: இப்படத்தின் மூல கதையை உருவாக்கியது மட்டுமின்றி படத்தை தயாரித்ததும் ரஜினிகாந்த்தான். படத்தை மொத்தமாக எடுத்து முடித்து பார்த்தவுடன் ஒரு சீனைக்கூட எடிட் செய்து தூக்கி வீச ரஜினிக்கு மனம் வரவில்லை. எனவே என்ன செய்யலாம் என்று யோசித்த அவர்; கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து, படத்தை கொஞ்சம்கூட குறைக்க வேண்டாம்; பேசாமல் இரண்டு இடைவேளைகள் விட்டால் என்ன என்ற யோசனையை சொல்ல பதறிவிட்டார் ரவிக்குமார்.
உள்ளே வந்த கமல்: கே.எஸ்.ரவிக்குமார் எவ்வளவு சொல்லியும் விடாமல் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்த ரஜினியை எப்படி மாற்றுவது என யோசிக்க; ரஜினி சொன்ன ஐடியாவை கமலிடம் ரவிக்குமார் சொல்ல; உடனே ரஜினியை தொடர்புகொண்டு, 'இரண்டு இடைவேளைகள் விடுவதெல்லாம் ஒத்துவராத ஒன்று' என சொன்ன பிறகுதான் ரஜினி மனம் மாறினார். இப்படி ஏகப்பட்ட நினைவுகளை கொண்டிருப்பது படையப்பா திரைப்படம்.
ரீ ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார். ஏன் ரஜினியே உற்சாகத்தில்தான் இருக்கிறார். அதனால்தான் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள்வரை இந்தப் படத்தை பற்றி பேசி வீடியோ வெளியிட்டார். அதில் பேசிய ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஜினியின் பேச்சு: அந்த வீடியோவில் பேசியிருந்த ரஜினி, "படையப்பா படத்தில் ஒரு சீனில் நான் சட்டையை கழற்றிவிட்டு வெறும் உடம்புடன் சண்டை போடுகிறேன் என சொன்னேன். அதை கேட்ட கே.எஸ்.ரவிக்குமார் ஷாக்காகி; 'என்னது நீங்கள் வெறும் உடலுடன் சண்டை போடுகிறீர்களா? அதெல்லாம் வேண்டாம் சார். சரியாக இருக்காது' என சொல்லி சிரித்தார். இல்லை இது சரியாக வரும் என சொல்லி சட்டையை கழற்றி காண்பித்தேன். உடனே அவர் சார் இது நல்லா இருக்கே என கூறி; சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை அழைத்து விஷயத்தை சொல்லும்போது அவரும் சிரித்துவிட்டார். இல்லை சார் இது ஒர்க் அவுட் ஆகாது என சொன்னார். ஆனால் ஏற்கனவே திருப்தியடைந்த கே.எஸ்.ரவிக்குமாரும் இல்லை சரியாக இருக்கும் என சொல்லி; அதை எடுத்தோம். உடலில் ஆயில் எல்லாம் போட்டு எடுத்தோம். அதைத்தான் இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











