தயாரிப்பாளர்கள் ஆயிரம் சொல்வார்கள்... அதைக் கேட்டு ஏன் அதிக விலைக்கு வாங்குகிறீர்கள்? - ரஜினி
சென்னை: ஒரு படத்தை விற்க தயாரிப்பாளர்கள் பல விஷயங்களைச் சொல்வார்கள். அதைக் கேட்டு விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் ஏன் அதிக விலைக்கு வாங்கி, பின்னர் நஷ்டம் என்று சொல்கிறீர்கள்? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பினார்.
ரஜினி படங்களை விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அதிக விலைக்கு வாங்கி திரையிடுகிறார்கள். ஆரம்பத்தில் நல்ல ஓபனிங், செம கலெக்ஷன் என்று கூறும் அவர்களே பின்னர் நஷ்டம் என்று கூறி போராட்டம் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக லிங்கா படத்தை வைத்து எழுந்த சர்ச்சைகளும் போராட்டங்களும் நினைவிருக்கலாம். ரூ 160 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்பட்ட அந்தப் படத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 10 கோடியைத் தந்தார் ரஜினி.

கபாலி படம் பெரிய வெற்றி என்று சொல்லப்பட்ட போதும், இரண்டு ஏரியாக்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் மட்டும் நஷ்டம் என்று கூறினர்.
இதுவரை இந்த விவகாரங்கள் குறித்து எதுவும் பேசாமலிருந்த ரஜினி, முதல் முறையாக இன்று நெருப்புடா பட விழாவில் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
தயாரிப்பாளர்கள் சினிமாவில் எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதை மனதில் படத்தை எடுக்க முன்வர வேண்டும். தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து படம் எடுக்கக்கூடாது.
ஒரு தயாரிப்பாளர் தன் படத்தை விளம்பரப்படுத்த, நல்ல விலைக்கு விற்க ஆயிரம் சொல்வார்கள். படம் குறித்து பெரிய அளவில் பேசத்தான் செய்வார்கள். அதைக் கேட்டு அதிக பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் பின்னர் நஷ்டம் என்று புலம்பினால் எப்படி?
இந்தத் துறையில் உள்ள முன்அனுபவம் வாய்ந்த விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளை பெற்று படங்களை விற்பனை செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்," என்றார்.


Click it and Unblock the Notifications











