ரஜினிகாந்த் நல்ல நடிகரா?.. இயக்குநர் ராம் கோபால் வர்மா பேச்சால் சர்ச்சை.. இப்படி சொல்லிட்டாரே
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியிருப்பது ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய அளவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். அவருக்கென்று சினிமாவிலேயே பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.முக்கியமாக அவரை ரோல் மாடலாகவும் இளம் நடிகர்கள் ஏற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. முதன்முறையாக ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதால் அந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

கலவையான விமர்சனம்: கடந்த வருடம் வெளியான அந்தப் படத்தில் ரஜினியுடன் துஷாரா விஜயன், அபிராமி, ஃபகத் பாசில்,ரித்திகா சிங் என ஏகப்பட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் பெரிதாக திருப்திப்படுத்தவில்லை. முழுக்க முழுக்க ஞானவேல் படமாகவும் இல்லாமல்; ரஜினிகாந்த்தின் படமாகவும் இல்லாமல் இருந்ததால் ரசிகர்களால் முழுவதுமாக கனெக்ட் ஆக முடியவில்லை. அதேசமயம் ரஜினிகாந்த்தின் நடிப்பு படத்தில் மெர்சலாக இருந்ததாகவும்; அவரது நடிப்புக்கு பாராட்டு தெரிவித்தனர் ரசிகர்கள்.
லோகேஷுடன் கூட்டணி: அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் அந்தப் படம் உருவாகிவருகிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்துவரும் சூழலில்; ரஜினி குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "நடிப்பு என்றால் ஒரு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டது. நட்சத்திரம் என்பது ஒரு நடிப்பை அடிப்படையாக கொண்டது. இரண்டுக்குமே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ரஜினிகாந்த் நல்ல நடிகரா என்றால் அது எனக்கு தெரியாது.
ஸ்லோ மோஷன் இல்லாமல்: ரஜினிகாந்த்தால் சத்யா படத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்திருந்த பிக்கு மாத்ரே கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. ஆனால் ரஜினிகாந்த்தை அப்படி பார்க்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். ஸ்லோ மோஷன் ரஜினிகாந்த்தால் இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. ரஜினிகாந்த் எப்போதுமே படத்தில் பாதி நேரம் எதுவும் செய்யாமல் நடந்துகொண்டே இருப்பார்.அதை கண்டு கவலைப்படவெல்லாம் தேவையில்லை.
மதிப்பை உயர்த்தியது: அதுதான் அவருக்கு அதிக ரசிகர்களை பெற்றுக்கொடுத்திருக்கிறது. ரஜினிகாந்த், அமிதாப் போன்றவர்களை மக்கள் தெய்வங்களாக பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் ஒரு கேரக்டராக மாறுவது என்பது கடினத்திலும் கடினம். ஒரு நட்சத்திரம் ஒரு சாதாரண கதாபாத்திரத்தில் நடிக்கும்போது நிச்சயமாக அது ரசிகர்களிடையே ஏமாற்றமாக இருக்கும்" என்றார். முன்னதாக ராம் கோபால் வர்மா இந்திய அளவில் லீடிங் டைரக்டர்களில் ஒருவராக இருந்தவர். அவர் இயக்கிய சிவா, சத்யா படங்கள் எல்லாம் அதிரிபுதிரி ஹிட்டடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











