தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்.. தவெக வேட்பாளருக்காக களத்தில் குதித்த ராமராஜன்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் பத்து நாட்களில் நடக்கவிருக்கிறது. அதனையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் பரப்புரையில் மும்முரம் காட்டிவருகிறார். சூழல் இப்படி இருக்க நடிகர் ராமராஜன் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளருக்கும், மதுரை மேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளருக்கும் ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில் அதுகுறித்து இப்போது விளக்கமளித்திருக்கிறார் அவர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " தமிழக மக்களுக்கும், ரசிகர் மன்ற உறவுகளுக்கும் அன்பான வணக்கம்! தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற ஏப்ரல் -23 அன்று நடைபெற உள்ள நிலையில் எனது கொள்கை, கோட்பாட்டு வழிகாட்டும் தெய்வங்களாக நாள் என்றென்றும் மதிக்கும் இருபெரும் தலைவர்கள் "புரட்சித் தலைவர் - புரட்சித் தலைவி" என்பதை உலகமே அறியும். அவர்களின் புகழைப் காப்பதும், அவர்கள் இட்ட வழியில் நடப்பதுமே என் ஆயுள் முழுவதும் நான் எடுத்துள்ள உறுதிமொழியாகும்.

ஏன் இப்படி?: காசுக்காகவோ, பதவிக்காகவோ ஒருபோதும் என் லட்சியத்தை மறந்து அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி தடம்மாற மாட்டேன், என் தன்மானம் குறைய இடம் தர மாட்டேன் என்ற போதும்....இத்தேர்தலில் என் சொந்த ஊரான மதுரை மேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் என் திரையுலக வாழ்வை தொடங்க காரணமான ஆரம்பகால தியேட்டர் முதலாளி தெய்வத்திரு. அம்பலகாரர் ஐயா அவர்களின் புதல்வர், மரியாதைக்குரிய அன்புச்சகோதரர் திரு. முருகன் அவர்களுக்கும்,
ஆதரவு தரவிருக்கிறேன்: ஆலங்குளம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும், 35 ஆண்டுகளுக்கு மேலாக என் நெருங்கிய நட்பில் உள்ள அன்பு உறவான திரு. TPV கருணாகரராஜா அவர்களின் சகோதரர் TPV வைகுண்டராஜா அவர்களின் அன்பு மகள் திரு. விபின் சக்கரவர்த்தி அவர்களுக்கும் நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலில் எனது ஆதரவையும் பரப்புரையையும் தர இருக்கிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைவர்கள் வழியில்தான் பயணம்: தவிர்க்க முடியாத அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் பெரிதும் நன்றிக்கடன் பட்டவன் என்ற அடிப்படையில் இந்த ஆதரவை வழங்க கடமைப்பட்டிருக்கிறேன் என்பதனை அனைவருக்கும் தெளிவுப்படுத்துகிறேன். என் இறுதி மூச்சு வரை இரு தலைவர்களின் வழியிலேயே பயணிப்பேன் என சத்தியமிடுகிறேன்.
அனைவரும் வாக்களியுங்கள்: இதற்கு வேறெந்த தனிப்பட்ட காரணமோ, காரிய உள்நோக்கமோ கிடையாது என்றும், யாரும் இதை தவறாக ஜோடித்து வதந்திகளைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மிக விரைவில் புதிய பட அறிவிப்போடு திரையுலகில் எள் முழுக்கவனத்தை செலுத்தி என்றும் உங்கள் மக்கள் நாயகனாய் வலம் வர தயாராகி விட்டேன் என்ற மகிழ்ச்சியோடு நன்றி கூறி விடை பெறுகிறேன். வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை! தவறாமல் வாக்களிக்க வேண்டுகிறேன். நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications















