அரசியலுக்கு வருகிறாரா அஜித்?.. சீக்ரெட் பகிர்ந்த பிரபல நடிகர்.. ஏகே ரியாக்ஷன் இதுதானாம்
சென்னை: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார் அஜித். இந்த ஃபார்முலாவை அவர் பல வருடங்களுக்கு பிறகு பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதியாகியிருக்கிறது. ஆனால் விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸாகும் என்பது தெரியவில்லை. இந்தச் சூழலில் அஜித் பற்றி நடிகரும், இயக்குநருமான ரமேஷ் கண்ணா பேசியிருக்கிறார்.
அஜித்தைப் பொறுத்தவரை தன்னுடைய கரியரின் ஆரம்பத்தில் தனது மனதில் பட்டதை ஓபனாக பேசிக்கொண்டிருந்தவர்தான். அதேபோல் பத்திரிகையாளர்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அவர் நடித்த அசல் பட சமயத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நிகழ்ச்சியை திரைத்துறையினர் நடத்தினார்கள். அதில் அஜித் கலந்துகொள்ள விரும்பவில்லை. இருந்தாலும் அவர் வற்புறுத்தப்பட்டார்.

போட்டுடைத்த அஜித்: அஜித்தும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருணாநிதியை புகழ்ந்து பேசினார். பிறகு அவர், 'நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் வேண்டுமென்று மிரட்டுகிறார்கள்' என கருணாநிதியிடமே ஓபனாக முறையிட்டார். மேலும் நடிகர்களை நடிகர்களாக மட்டும் இருக்க விடுங்கள் என்று சட்டென கூறினார். இந்தச் சம்பவம் அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அசல் படத்துக்கும் அப்போதைய ஆளுங்கட்சியால் குடைச்சல் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஒதுங்கிய அஜித்: அந்தப் பிரச்னையிலிருந்து அஜித் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வதையோ இல்லை பத்திரிகையாளர்களை சந்திப்பதையோ நிறுத்திவிட்டார். அதேபோல் அரசியல் தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிப்பதையும் நிறுத்திக்கொண்டு; தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கிறார். இருந்தாலும் படத்தின் ப்ரோமோஷனில்கூட அவர் கலந்துகொள்ளாதது வருத்தம் அளிப்பதாக பலரும் கூறுகிறார்கள். இருந்தாலும் அஜித் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை.
படங்களில் பிஸி: அஜித் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனியும், குட் பேட் அக்லியை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்கிவருகிறார்கள். இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. இதற்கிடையே அஜித் எப்போதுமே அதிமுகவின் ஆதரவாளர் என்ற பிம்பமும் உண்டு. ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவார்கள்.
ரமேஷ் கண்ணா பேட்டி: சூழல் இப்படி இருக்க அஜித்தின் போட்டியாளராக கருதப்படும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது. இதனையடுத்து அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்களில் சிலர் குரல் எழுப்புகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் துளியும் வாய்ப்பில்லை என்பதுதான் எதார்த்தம். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரமேஷ் கண்ணா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
ரமேஷ் கண்ணா பேட்டி: அவர் அளித்த ஒரு பேட்டியில், "அரசியலுக்கு விஜய் வந்தது மகிழ்ச்சிதான். ஷூட்டிங் ஸ்பாட்டிலோ அவர் அரசியல் குறித்து பெரிதாக பேசி நான் பார்த்ததில்லை. அதேபோல்தான் அஜித்தும். அவரிடம் சென்று விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்று கேட்டோம் என வைத்துக்கொள்ளுங்கள்; அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றுவிடுவார்" என்றார்.


Click it and Unblock the Notifications











