திருமணமே நின்ற பின்னரும் கண்ணியம்! ராஷ்மிகாவின் 'எக்ஸ்' ரக்ஷித் ஷெட்டி.. இப்போ என்ன செய்யறாரு?
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் 26ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நெருங்கிய வட்டத்தினர் மத்தியில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகவும் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் திருமணத்திற்கு நான்கு நாட்கள் அதாவது 22ஆம் தேதி வரை படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் தான் தன்னை திருமணத்திற்கு தயார் படுத்தும் வேலைகளைச் செய்யப்போகிறாராம்.
இப்படி இருக்கையில் ராஷ்மிகா மந்தனா தனது திரை வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த போது அவரது திருமணம் இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறும் என்று நினைத்துப் பார்த்திருப்பாரா என்பது கேள்விக்குறிதான். ஆனால் கன்னட திரையுலகில் காலடி எடுத்து வைத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே திருமணம் செய்யவிருந்தார் ராஷ்மிகா.
அதாவது இவர் அறிமுகமான கன்னடப் படமான கிரிக் பார்ட்டி படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி உடன் ஏற்பட்ட காதல் திருமணத்தை நோக்கி நகர்ந்தது. இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் நடைபெறாமலே இருந்தது. இதனால் இவர்களுக்கு இடையில் ஏதோ பிரச்னை என்று பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். பலரும் கூறியது போல் இந்த திருமணம் நடைபெறாமல் நின்று போனது.

நின்றுபோன திருமணம்: இவர்களின் திருமணம் நிற்க முக்கிய காரணம் ராஷ்மிகாவிற்கு தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்ததுதான் என்றும் அதனால் அவர் ரக்ஷித் ஷெட்டியை வேண்டாம் என்று உதறிவிட்டார் என்றும் எல்லாம் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் சம்மந்தப்பட்ட ரக்ஷித் ஷெட்டியோ மிகவும் ஜெண்டில் மேனாக ஒரு பதிவை தனது சமூக வலைதள பதிவில் பகிர்ந்தார். குறிப்பாக ராஷ்மிகா மந்தனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பகிர்ந்தார். அதில், " யாரையும் திட்டாதீர்கள், அவரவர்களுக்கு என்று ஒரு தேர்வும் முடிவெடுக்கும் உரிமையும் உள்ளது" என்று பதிவிட்டார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் பல இணையவாசிகள் காதலில் பிரிவைச் சந்தித்த பின்னரும் காதலி நன்றாக இருக்கட்டும் என்று நினைக்கும் ஆண்களில் ரக்ஷித் ஷெட்டியும் ஒருவர் என்று பலரும் அவரைப் பாராட்டினர்.

இப்போது என்ன செய்கிறார்?: ரக்ஷித் ஷெட்டி இன்னுமும் கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் உள்ளார். 777 சார்லி என்ற படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். ஆனால் அவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். ராஷ்மிகா மந்தனாவுக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில் இவரது ரசிகர்கள் பலரும் இவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











